தென்றலில்லாத
இன்றைய புழுக்கத்தை
மௌனமாய் ஏற்பதன்றி
வேறென்ன செய்யுமாம் வெள்ளைப் பூக்கள்.

சூரியனுக்குத்தான் தெரியும்…
நிலாக்கால வெளிச்சத்தையும்
நட்சத்திரக் கண் சிமிட்டலையும்
பார்க்கக் கிடைக்காத வருத்தம்.

இன்னும் கொஞ்சநேரம்
பாடிக் கொண்டிருக்குமாறு
சொல்லியனுப்ப முடியுமா?
அந்த அக்காக் குருவியிடம்!

மிகுந்த பக்குவம்
வேண்டியிருக்கிறது.
சோகத்தை எதிர்கொள்வதற்கல்ல
ஆறுதல் சொல்வதற்கு.

பூக்களின் ராஜ்ஜியத்தில்
எப்படி முளைக்கலாம்?
பார்த்தீனியங்கள்!

பந்தயக் குதிரைக்குத்
தீவனம் சுமந்து,
வண்டியிழுக்கும்
நொண்டிக் குதிரை.
(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *