நான்காம் திருமுறை உரை

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்குக்
கரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே!

திருமுறைகளின் அருமைப்பாடுகளை ஓதி உணரவும், உணர்ந்து பின்பற்றும் விதமாக தொடர்ந்து இயங்கி வருகிற அரனருள் அமைப்பினுடைய பன்னிரு திருமுறை திருவிழாவில் கலந்துகொண்டு நான்காம் திருமுறை நன்நாளாகிய இன்று நற்றுணையாவது நமச்சிவாயவே என்கிற தலைப்பில் நாவுக்கரசர் பெருந்தகையினுடைய அருளிச்செயல்கள் சிலவற்றை உங்களுடன் சிந்திக்க திருவருள் கூட்டுவித்து இருக்கின்ற இந்நிலையில் விழா தலைமை கொண்டு இருக்கிற மருத்துவர் சிவாஜி அவர்களுக்கும், எனக்கு முன்னால் திருமுறைகள் பற்றி பறந்து பறந்து ஒரு பருந்து பார்வை பார்த்து இருக்கிற தமக்கையார் டாக்டர் சாரதா நம்பி ஆரூரன் அவர்களுக்கும் அரனருள் என்கிற இந்த அமைப்பை அரனருளாலேயே தோற்றுவிக்கிற நம்முடைய சாமி தண்டபாணி வித்துவான் உள்ளிட்ட நண்பர்களுக்கும் பெருமக்களுக்கும் திரண்டு இருக்கிற சிவனருள் செல்வராகிய உங்கள் எல்லோருக்கும் வணக்கங்கள் உரித்தென ஆகுக.

திருமுறை விழாவில் மனித பிறப்பு எவ்வளவு முறை என்பதைத்தான் இன்றைக்கு இரண்டு பேரும் பேசி இருக்கிறார்கள். ஒரு முறையா, இரு முறையா, பல முறையா என்ற கேள்வியை முறைப்படுத்துவதுதான் திருமுறை. ஏனென்றால் ஓர் உயிரினுடைய பக்குவத்திற்கு ஏற்ப பிறவி வேண்டும் என்றும் தோன்றுகிறது; பின்னால் வேண்டாம் என்றும் தோன்றுகிறது. சிதம்பரத்தில் பிள்ளை பெருமானுடைய திருகூற்றுகளை தரிசித்தபோது நாவுக்கரசர் பெருமானுக்கு இன்னொரு பிறவி வேண்டும் என்று தோன்றுகிறது.

அவருக்கே திருப்புகழ். புண்ணியா புண்ணடிக்கே போதுகின்றேன் பூம்புகழ் மேவிய புண்ணியனே என்கிற போது பிறவாமையை நோக்கி அவர்கள் சொல்கிறார்கள். எனவே வாழ்கிறபோது வாழ்க்கையில் ஈடுபாடும் விடுபட்டு போகிற போது சிவன் திருவடிகள் சேர்கிற அந்த உணர்வும் இயல்பாக கூற்றுவிப்பதைத்தான் நாம் இறையருள் என்று சொல்கிறோம். எனவே இதுகுறித்து நம்முடைய அருளாளர்கள் நீளப் பேசி இருக்கிறார்கள்.

நற்றுணையாவது நமச்சிவாயவே என்கிற தலைப்பில் சார்ந்து இருக்கக்கூடிய பதிகத்திலேயே ஒரு பாட்டு இதற்குப் பதில் சொல்கிறது. நம்முடைய விழா தலைவர் பேசுகிற போது மூவகை கருமங்களைப் பற்றி சொன்னார். பிரார்த்தம், சஞ்சிதம், மகாமியம் பற்றி சொன்னார். நாம் பார்த்தால் மலையைப் போல் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்ற இந்த கரும தொகுப்புகள். ஆனால் இந்த கரும தொகுப்புகள் ஒரு விநாடியில் எரிந்து போவதற்கு ஒரே ஒரு கனல் இடவேண்டி இருக்கிறது. அது நமச்சிவாய என்கிற திருநாமம் என்கிறார் திருநாவுக்கரசர்.

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வெழல்
உண்ணிய புகல் அவை ஒன்றும் இல்லையாம்

ஒரு துளி நெருப்பு சிவக்கனல் உள்ளே பட்டுவிட்டால் அவ்வளவு பெரிய கருமங்களின் தொகுப்பு ஒன்றும் இல்லாமல் போகிறது.

பண்ணிய உலகினில் பயின்ற பாவம். இது மிக அருமையான சொற்றொடர். பயின்ற பாவம் என்கிறார். நாம் பாவம் செய்தற்கு நிறைய பயிற்சி எடுத்து இருக்கிறோம். ஒவ்வொரு பிறவியும் ஒவ்வொரு பயிற்சி.

பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி அறுப்பது நமச்சிவாயவே

அப்படியானால் எந்தக் காலகட்டத்தில் பிறவியில் ஈடுபாடு வேண்டும்-, எந்தக் காலத்தில் பிறவியற்றுப் போய் பிறவாபெருநதியில் உயிர் சேர வேண்டும் என்பதையும் சிவன் முடிவு செய்கிறார் என்பதால் அந்தக் கவலையும் நமக்குக் கிடையாது.

நாம் வாழ்கின்றபோது என்ன செய்ய வேண்டும், வாழ்கிற நெறி என்பதைத்தான் நம்முடைய ஐயா சாமி தண்டபாணி அவர்கள் கேட்டார்கள். நமக்குரிய நியமங்களை இருக்கிறபோது சரியாகச் செய்வது.

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி
அரும்பொடு மலர்கள் கொண்டு

எல்லாவற்றையும்விட மிக முக்கியம், என்ன செய்தாலும் ஈடுபட்டு செய்ய வேண்டும் அங்கு நல் ஆர்வத்தை உள்ளே வைத்து. நீங்கள் செய்கிற வேலை சிறப்பதற்கும், வழிபாடு சிறப்பதற்கும், பண்ணுகிற சேவை சிறப்பதற்கும் அடிப்படையான ஒரு தகுதி,

ஆங்கு நல் ஆர்வத்தை உள்ளே வைத்து.

ஒவ்வொரு நாளும் சிவபெருமான் திரு முன்னிலையில் தீபம் ஏற்றுகிறோம் என்றால் அந்த தீபம் ஏற்றுகிற அந்த ஒரு விநாடி அந்த திரியோடும், அந்த அகலோடும், அந்த கனலோடும் நாம் இருக்க வேண்டும். விளக்கு இடுங்கள், தூபம்போடுங்கள் என்று அப்பர் சொல்லவில்லை.

விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்கு.

எதை நாம் ஈடுபட்டுச் செய்கிறோமோ அதில் நாம் முழுமையாக நம்மைக் கரைத்துக் கொள்கிற போது நாம் செய்கிற ஒவ்வொரு வேலையும் ஒரு தவமாக மாறுகிறது என்பதைத் தான் அருளாளர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்.

-மரபின் மைந்தன் முத்தையா

                                                                                                                                                           (தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *