நான்காம் திருமுறை உரை

இங்கே எனக்குத் தரப்பட்டு இருக்கிற நேரத்தில் நான்காம் திருமுறையில் நாவுக்கரசர் பெருமானுடைய பங்களிப்புகள் பற்றி ஒரு நிரல்பட யோசிக்க வேண்டும் என்று கருதுகிறேன். முதல் விஷயம் பெரிய புராணத்தில் 63 நாயன்மார்கள், நம்முடைய 9 தொகையடியார்கள், இவர்களைப் பற்றிய குறிப்புகள் வருவதற்கு எது மூலம் என்பது நமக்குத் தெரியும்.

திருத்தொண்டத் தொகை நமக்கு மூலம். ஆனால் திருத்தொண்ட தொகையினுடைய பாடல் பாணிக்கு எது மூலம் என்பதை நாம் யோசிக்க வேண்டும். இதே திருவாரூர்க்கு இதே தேவாசிரியர் மண்டபத்திற்கு திருநாவுக்கரசர் பெருமான் எழுந்தருளுகிறார். அவருக்கு தோன்றுகிறது, அங்கே அடியார் பெருமக்கள் எல்லாம் அமர்ந்து இருக்கிறார்கள். சுந்தரருக்கு முன்னாலே இப்படியரு சூழ்நிலை நாவுக்கரசர் பெருமானுக்கு ஏற்படுகிறது. அவர், அவர்கள் அருகே போய் வணங்குவதற்கு அஞ்சுகிறார்கள்-. நாவுக்கரசர் அவர் என்ன சொல்கிறார். கொஞ்ச காலம் சமணர்களோடு ஈடுபட்டு அவர்கள் வாழ்க்கை முறையில் இருந்த எனக்கு இவர்களை வழிபடுகிற புண்ணியம் எனக்குக் கிடைக்குமா என்று திருவாரூரில் நின்று கேட்கிறார்.

இடமே இல்லாமல் குகையில் வாழக்கூடிய சமணர்கள்,

மற்றிட மின்றி மனைதுற தல்லுணா வல்லமணர்

இரவு நேரத்தில் சாப்பிடாத அமணர்கள், அவர்கள் சொல்வதைப் பெரிதாக நினைத்து நான் போனேன்.

சொற்றிட மென்று துரிசுப டேனுக்கு முண்டுகொலோ
விற்றிடம் வாங்கி விசயனோ டன்றொரு வேடுவனா
புற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்கு தொண்டராம் புண்ணியமே.

அப்போது திருவாரூரில் எழுந்தருளியிருக்கக்கூடிய புற்றிடங்கொண்டீசருக்கு தொண்டருக்கு தொண்டராக வேண்டிய புண்ணியம் எனக்கு வேண்டும் என்று திருநாவுக்கரசர் விண்ணபித்தார். தொண்டருக்கு தொண்டர் என்று அவர் அருளிய அந்த சொல்தான் சுந்தரமூர்த்தி சாமிகள் அவர்கள் வாயில் அடியாருக்கு அடியேன் என்று வந்ததாக நாம் பார்க்கிறோம். இதிலிருந்து திருத்தொண்டத் தொகைக்கு வித்திட்டவர் நம்முடைய திருநாவுக்கரசர் பெருமான் என்பது இந்தப் பதிகத்தின் வாயிலாக நமக்கு விளங்குகிறது.

பொதுவாக உணவு உண்ணுவதிலேயே ஒரு முறை வேண்டும். வாழ்க்கையில் முதலில் உணவு உண்ணுகிற முறை. இன்றைக்கு நாம் பார்க்கிறோம் கல்யாண வீட்டிற்குப் போனால் தட்டை எடுத்துக்கொண்டு அவன் தெருத்தெருவாக அலைகிறான். அப்புறம் அங்கும் இங்கும் நின்றுகொண்டே சாப்பிடுகிறான். நின்றுகொண்டே சாப்பிடுகிற பழக்கம் சைவர்களுடைய பழக்கம் அல்ல என்பதை நாவுக்கரசர் இந்தப் பதிகத்தில் கண்டிக்கிறார்.

கையில் இடும் சோறு நின்று உண்ணும் காதல் அமணர் என்று சொல்கிறார். அது அமணர்களுடைய பழக்கமாம். அருந்தும் போது உரையாடாத அமணர். அவர்கள் சாப்பிடும் போது பேசமாட்டார்கள். நின்று கொண்டே சாப்பிடுகிறபோது நாம் நெற்றியில் நீறுபூசி இருந்தால் கல்யாண வீட்டில் தட்டை எடுத்து நின்று கொண்டே சாப்பிடுகிற நேரம் நாமும் சமணர்களாக மாறிவிடுவோம். நான் சொல்வதைத்தான் நாவுகரசர் பெருமானும் சொல்கிறார்.

ஆக அந்த அடியாருக்கு அடியேன் என்பதற்கு தொண்டருக்கு தொண்டர் என்கிற சொற்றொடரை நான்காம் திருமுறையில் பெருமான் பெய்து இருக்கிறார் என்பதை நான் முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போ அம்மா சொன்ன மாதிரி போன வாரம் கிருஷ்ணஞான சபாவில் பன்னிரு திருமுறை விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு சேரமான் பெருமான் நாயனார் பொன் வண்ணத்தந்தாதி பற்றி பேசினேன். இந்த பொன் வண்ணத்தந்தாதி உங்களுக்கு எல்லாம் தெரியும். சுந்தரமூர்த்தி நாயனார் ஐராவதத்திலே ஆகாய கைலாயத்திற்கு எழுந்தருள்கிறார். இவர் பஞ்ச கல்யாணி குதிரையிலே ஏறி புரவியின் செவியில் திருவைந்தெழுத்தைச் சொல்ல அதுவும் ஆகாயத்தில் பறக்கிறது.

முதலில் அவருக்குத்தான் முறைப்படி சுந்தரருக்குத்தான் அனுமதி. இவர் அப்பாயின்மென்ட் வாங்கவில்லை. அதனால் வெளியே நிறுத்திவிட்டார்கள். நமது ஆளுனராக இருந்தால் அவர்களை 5 மணிக்கு வரச் சொல்லுங்கள். 7மணிக்கு வரச்சொல்லுங்கள் என்று சொல்வார். ஆனால் சிவபெருமானுக்கு அந்த தகவல் போகவில்லை. பிறகு இவர் போய் நண்பரை கூப்பிட்டுக் கொண்டுபோகிறார். உள்ளே போய்விட்டு வெளியே வந்தபிறகு பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். யாரை-? சேரமான் பெருமான் நாயனார் உள்ளே சென்றீர்களே என்ன சொன்னார்-? எப்படி இருந்தது?

அப்போ அவர் சொல்கிறார், “அவர் மேனி பொன் வண்ணமாக இருந்தது. மின்னல் வண்ணமாக அவர் சடை இருந்தது. வெள்ளி குன்றமாகிய இந்த கைலாயத்தினுடைய வண்ணம் எதுவோ அதுதான் நந்தியினுடைய வண்ணமாக இருந்தது.”

“சரி. உங்களைப் பார்த்ததில் அவர்க்கு மகிழ்ச்சியா” என்று கேட்கிற போது அப்போதுதான் ஒரு பெரிய உண்மையை சேரமான் நாயனார் சொல்கிறார். “அப்பா, சிவபெருமானை தரிசிக்கிற போது அவனை தரிசிப்பதில் எனக்கு மகிழ்ச்சியென்றுதான் நான் நினைத்தேன். ஆனால் சிவனை தரிசித்ததில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ இவனைப் பார்த்ததில் சிவனுக்கும் அவ்வளவு மகிழ்ச்சி” என்றார். இந்த நம்பிக்கையோடு நாம் வழிபாடு செய்தால் அந்த வழிபாடு நம்மை அதில் இன்னும் ஈடுபடுத்தும்.

-மரபின் மைந்தன் முத்தையா

                                                                                                                                                           (தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *