அந்தமில்லாச் சுகமடைந்தோம் 

கோட்டைகள் நடுவே ஸ்ரீபுரத்தில்-அவள்
        கொலுவீற்றிருக்கும் சாம்ராஜ்யம்
     மீட்டிடும் வீணைகள் மத்தளங்கள்-இளம்
         மெல்லியர் நடனத்தில் சிவலாஸ்யம்
     ஏட்டினில் எழுதும் வரியிலெல்லாம்-அவள்
         எழில்திரு வடிகளின் ரேகைகளே
     நீட்டிய சூலத்தின் நுனியினிலே-பகை
         நடுங்கச் செய்திடும் வாகைகளே

    பூரண கன்னிகை திருவருளே-இந்தப்
        பிரபஞ்சம் தோன்றிய கருவறையாம்
    காரண காரியம் யாவையுமே-எங்கள்
        காளி சமைத்த வரைமுறையாம்
    தோரண மாவிலை அசைவுகளில்-அந்தத்
       தோகையின் சுவாசம் தென்படுமாம்
    நாரணி நான்முகி நாயகியாள்-நம்
       நாபிக் கமலத்தில் அமர்ந்தனளாம்

      ஆயிரம் அசுரர்கள் எதிர்ப்படினும்-விழி
             அசைவினில் யாவரும் தவிடுபொடி
        தாயெனத் தொழுது பணிந்தவரை-அள்ளித்
              தாங்கிடும் அவளின் கருணைமடி
        தூயநல் மலரிட்டு தூபமிட்டு-அன்னை
              திருவுளம் மகிழ்ந்திட பூசையிட்டால்
        மாயைகள் விலக்கி மலர்த்திடுவாள்– நம்
               மனங்கொண்ட காயங்கள் உலர்த்திடுவாள்

     சுந்தரி சியாமளை  ஸ்ரீபுரத்தாள்-எழில்
         ஸ்ரீசக்ர நாயகி  திரிசடையாள்
     மந்திர ரூபிணி மலர்ப்பதத்தாள்-எழும்
        மமதைகள் எரிக்கிற விழிநுதலாள்
     தந்திர சாத்திர தாத்பரியம்-தனில்
         தாண்டவம் புரியும் சதுர்மறையாள்
      அந்தரி கதியென சரணடைந்தோம்-ஓர்
          அந்தமில்லாத சுகமடைந்தோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *