சுடர் வளர்ப்பாள்
பக்கத்தில் நடப்பவள் பராசக்தி- நம்
பார்வையில் படுவாள் சிலசமயம்
தர்க்கக் குப்பைகள் எரித்துவிட்டால்-அவள்
திருவடி தெரிந்திட இதுசமயம்
செக்கச் சிவந்த தளிர்விரல்கள்- நம்
சிகையைக் கோதவும் இதுதருணம்
இக்கணம் எழுதும் இந்தவரி -அவள்
இமைகள் அசைந்ததில் முகையவிழும்
மூலப் பெருஞ்சுடர் பராசக்தி-விழி
மூன்றும் முச்சுடர் கருவறையாம்
கோலச் சிற்றிடை  கையூன்றி-அவள்
கோவிலில் நிற்பதே பேரழகாம்
வாலை வடிவினள் வரும்தருணம்-எங்கும்
வீசிடும் குங்கும வாசனையாம்
சோலை அரும்புகள் வாய்திறந்தே-அன்னை
சோபனப் பெரும்புகழ் பேசினவாம்
மோதிடும் கடல்போல் வரும்வினைகள்-எங்கள்
மோகினி கருணையில் வற்றியதே
பேதையென் கரமோ தூக்கத்திலும் -அவள்
பாதத்தின் பெருவிரல் பற்றியதே
வேதத்தின் நுட்பங்கள் அறிந்ததில்லை-என்னில்
வித்தகி பைத்தியம் முற்றியதே
நாதத்தின் வடிவென அவளெழுந்தாள்-என்
நாபியும் ஸ்ருதியிங்கு கூட்டியதே
காட்டு வெளியினில் சில்வண்டும்-சொல்லிக்
காட்டும் பீஜத்தில் அவளிருப்பாள்
பாட்டு வரிகளின் நடுவினிலே-அவள்
பாதம் பதித்துப் பரிகசிப்பாள்
தீட்டும் வைகறை ஓவியத்தில் -எட்டுத்
திசைகளும் ஒளியாய் அவள்ஜொலிப்பாள்
மூட்டும் மூலாதாரக்கனல்-உச்சி
முட்டிடும் வரையில் சுடர்வளர்ப்பாள்
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *