imagesமழைமுகில் வண்ணம் அவள்வண்ணம்
மழைதரும் கருணை அவள்வண்ணம்
பிழைகள் பொறுப்பாள் பரிந்திடுவாள்
பற்பல அற்புதம் புரிந்திடுவாள்
குழையணி காதர் காதலிலே
குதூகலம் காணும் மஹேஸ்வரியாள்
விழைவுகள் யாவும் அருளிடுவாள்
வித்தகி திருப்பதம் பரவிடுவோம்!

மின்னலை மென்னகை ஆக்கியவள்
மீட்டிடும் இசையினில் மிளிர்கிறவள்
என்னிலை நன்னிலை ஆக்குபவள்
எங்கும் எதிர்ப்படும் கீர்த்தியினாள்
கன்னல் கவியாய் சித்திரமாய்
கலைகள் பெருக்கும் காளியவள்
தென்றலில் புயலில் திரிகின்ற
திரிபுரை திருப்பதம் பணிந்திடுவோம்!

காலம் அவளது பந்தாகும்
கால்களில் உருட்டும் கைகாரி
ஓலம் இட்டழும் உயிர்களிடம்
ஓடி வருகிற ஓங்காரி
நீலத் திருவிழி நாயகியை
நித்தில விழிநுதல் காளியினை
வாலையை எங்கள் மனோன்மணியை
வாழ்த்தி வழுத்துதல் வாழ்வாமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *