நாளைக்கொரு நந்தவனம் போயிருந்தேன்
வந்து சேராத நேற்றுகளுக்காக
அங்கேதான் நான் காத்திருந்தேன்.
நாளையின் நந்தவனம் மிக அழகானது
நிறம் நிறமாய்க் கற்பனைகள் கண்பறிக்கும் இடமது.
நேற்றுகள் கொண்ட மரண தாக்கத்தைத்
தணிக்கிற ஊற்று அங்குதான் உள்ளது.
“கணகண”வென்ற கனவின் சூட்டுடன்
நாளையின் உணவு மேஜையின் விருந்துகள்
ஆறிப்போகாத உணவுகளின் வரிசை
வந்து சேராத நேற்றுகளுக்காக.
நாளையின் நந்தவனம் மர்மங்கள் நிறைந்தது.
இன்றென் முகத்தில் துப்பிய காலம்
என்னை முத்தமிடப் போவதும் அங்குதான்.
அடடா! சொல்ல மறந்து விட்டேன்.
நாளையின் நந்தவனம் சுதந்திரமானது.
நேற்றுகளின் விலங்குகளை உடைப்பதற்கான
சுத்தியல்கள் அங்கே சிதறிக் கிடக்கும்.
நந்தவனத்தின் வெளியே கூட
நடந்து பார்க்கலாம் நீங்களும் நானும்.
தோட்டக்காரன் கொலை செய்ய வந்தால்
நந்தவனம் அதற்குப் பொறுப்பேற்காது.
வந்துசேராத நேற்றுகளையெல்லாம்
வழியில் அவன்தான் வன்கொலை செய்தான்.

 

(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *