பாண்டவர்களுடன் சற்குரு….
(ஈஷா யோகா மையத்தில் சத்குரு அவர்கள் மகாபாரதம் என்னும் நிகழ்ச்சியை பிப்ரவரி 12 முதல் 18 வரை நிகழ்த்தினார்கள். நிறைய இழப்புகளுக்கு நடுவிலும் நம்பிக்கை இழக்காத பாண்டவர்கள் மனநிலை குறித்து எழுதித் தந்த பாடல் இது. இசையமைத்துப் பாடியவர்கள் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினர்)
நாளை வெல்லும் நம்காலம்

அரண்மனை நிழலில் இருந்தாலென்ன
மரங்களின் நடுவே துயின்றாலென்ன
அன்னையின் மடியே ஆதாரம்
அண்ணனின் சொல்லே நால்வேதம்

ராஜ்ஜியம் நம்வசம் இருந்தால் என்ன?
ஆரண்ய வாசம் நடந்தால் என்ன?
காருண்யன் கண்ணன் நமதுபக்கம்
நல்லவர் நிழலே நமதுசொர்க்கம்

உறவுகள் பகையாய் ஆனால் என்ன?
வஞ்சனை நம்மை சூழ்ந்தால் என்ன?
இருண்ட காலங்கள் விடிந்துவிடும்
த்ரௌபதி சபதம் வென்றுவிடும்

ஈஷா மகாபாரதம் நிகழ்ச்சியில் வைக்கப்பட்ட பஞ்சபாண்டவர் மற்றும் த்ரௌபதியின் சிலைகள்

சகுனியின் பகடை ஜெயித்தால் என்ன?
தர்மன்  எல்லாம் தொலைத்தால் என்ன?
நாளை விடியும் நம்காலம்
நியாயம் கேட்கும் காண்டீபம்

நடக்கும் தூரம் வளர்ந்தால் என்ன?
அரக்கு மாளிகை எரிந்தால் என்ன?
நடக்கப் போகுது ஒருமாற்றம்
நிகழப்போகுது குருஷேத்ரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *