கையிற் கரும்பிருக்க கண்ணில் கனிவிருக்க
மெய்யிற்செம் பட்டுடைய மேன்மையினாள்- உய்யவே
நன்றருளும் நேய நிறையுடையாள் சந்நிதியில்
நின்றருளும் கோலத்தி னாள்

நாளிற் கதிராய் நிசியில் நிலவாகி
கோள்கள் உருட்டுகிற கைகாரி -தாளில்
மலர்கொண்ட நாயகி மங்கையபி ராமி
நிலவெழவே செய்த நிலவு.

நிலவும் இரவினிலே நீலச் சுடராய்
உலவுகிற உத்தமியாள் உண்டே- கலக்கம்
துடைக்கின்ற பார்வை துணையானால் வாழ்வில்
கிடைக்காத ஒன்றுண்டோ கூறு.

கூறானாள் கூத்தனுக்கு கூற்றுதைத்தாள் மார்க்கங்கள்
ஆறானாள் யாவுமே ஆனாளே -வேறாய்
வருத்தும் வினைவிழவே வைப்பாள் கடைக்கண்;
கருத்திருக்கும் எங்கள்நங் கை.

மரபின் மைந்தன் முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *