ஒரு பறவையின் சிறகு துளிர்விடும் நாளுக்கு மௌன சாட்சியாய்   பஞ்ச பூதங்களும்   நிற்கின்றன. தன்னிலிருந்து உந்தியெழ ஆசீர்வதிக்கிறது பூமி. தன்னை நோக்கித் தாவ அழைக்கிறது ஆகாயம். சிறகுகளைக் கோதுகிறது காற்று. சிறகு தாழ்த்தித் தேடினால் தாகம் தணிக்க உத்திரவாதம் தருகிறது நீர். வனமெங்கும் பரவும்பொழுதும் தன் நாவுகளைத் தாண்டிப் பறக்க அவகாசம் அளிக்கிறது நெருப்பு.
சங்கத் தமிழ்மனம் காட்டும் பெண்ணுக்கு இயற்கையே தாய்வீடு. நெருங்கின பந்தங்களை விடவும் நேசத்துடன் இயற்கையோடு சொந்தம் கொண்டாடும் மனங்களை சங்க இலக்கியங்களில் சந்திக்கலாம்.
இயற்கையின் அந்தரங்கங்களில் ஊடுருவி ஊடாடும் பறவையாய் சொந்தம் கொண்டாடுகிறார் சக்திஜோதி.
நான்
இமயத்தின் மகள்
என்னைக் காதலிப்பவன் சூரியன்
தன் கதிர்களை என் மீது பாய்ச்சுகிறான்
நான்
உருகி நதியாகிறேன்
பெருகி
இந்த நிலமெங்கும் பாய்ச்சுகிறேன்
என்றாலும்
நான் எந்த நதியும் அல்ல
பனிமலையின் உருவத்தில்
காலத்தின் முன் நிற்கிறேன்
அவ்வளவே .
கடற்கரையில்
அதிசயமாய் தனித்திருக்கும் ஒற்றை மரத்தின்
இலைகளில் உறங்கும் காற்றை எழுப்பிவிட்டேன்

புயல் ஓய்ந்து
மழை நனைத்துக்
குளிர்ந்துகிடக்கும் நிலத்தில்
ஒற்றைச் சுடருடன் நிற்கிறேன்

என்பதெல்லாம் தாய்வீட்டில் ஒரு பெண் தன்னை நிலைநிறுத்தும் உரிமைகள். அந்த உரிமைகளின் விகசிப்பு வரிகள்தோறும் தென்படுகிறது.
படைப்பு மனம் இயற்கையைத் தொட்டும், உரசியும் தோய்ந்தும் கிடக்கையில் வாழ்வின் ஒவ்வோர் அசைவும் இயற்கையுடன் அடையாளப்படுத்தப்பட்டே எழுதப்பட்டு வந்தன. அந்தத் தோய்வில் சங்கப் புலவர்கள் எழுதிக்கொண்டே சென்றதை வகைப்படுத்த வந்தவர்கள் திணையும் துறையும் வகுக்க இயற்கையின் துணையையே நாடினர்.
கருப்பொருள் உரிப்பொருள், ஏன்- பரம்பொருள் கூட இயற்கையின் பெயர்சொல்லியே சுட்டப்பட்டதும் அதனால்தான். அந்த மனதை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருப்பதே சக்திஜோதியின் எழுத்துகளில் மிளிரும் தனித்தன்மை.
கானகத்தின் நடுவே
பழமையின் மரங்கள் சூழ்ந்திருந்த  மைதானத்தில்
சுலுந்தங்குச்சிகளில்  பந்தங்கள்  எரியத் துவங்கின

இலவம் வெடித்திருக்க
விரியக் காத்திருக்கும் கோங்கம் பூக்களின்
குவிந்த  இதழினுள் தாது அடர்ந்திருக்க
புற இதழ் கருத்த தூய வெண்பாதிரி பூக்கள் வாசம் பரப்ப

அப்போதுதான் மலரத்துவங்கும்
செங்காந்தள் மலர்க்கொடியை தன்மேல் படரவிட்டிருந்த  அவன்
அவளைத் தேர்ந்திருந்தான்

அவளின் இமைகள் கிறங்கிக் கிடக்க
மதனமேடையில் நடனமாடத் துவங்கினான்
மூங்கில் காடுகளில் புகுந்தசைந்த காற்றால்
அவளை இசைத்தான்

வனத்தின் அசைவும்
காட்டாற்றின் ஓசையும்
பறவைகளின் சிறகடிப்பும்
இயைந்திட
உடல் ஆடினான்

இருள்
அவனது நடன அதிர்வில்
வெளிச்சமென பெருக
சுலுந்தங்குச்சி நெருப்பாய் அவன்

முன்னும் பின்னும் அசைந்த காலத்தில்
காய்ந்த மரத்தின் உதிர்ந்த செம்பூவென பற்றியெழுந்தாள்
வெடித்த இலவம் காற்றில் மிதந்து கடந்து
புராதன வேர்களை பரப்பியது நிலமெங்கும்

காலத்தை
நெருப்பின்வழி கடக்கும்போது

நடுநிசிக் கிளைகளில் பறவைகள் மறைந்தன.”

அகவுணர்வின் அழுத்தமான தடங்கள் பசிய வனத்தின் வாசத்தோடு பதிவாகியிருக்கும் இந்தக் கவிதைகள் புதிய வாசிப்பனுபவத்தை தருகின்றன.

செந்தழல்  நடுவிலிருந்து  உண்டாகும் சொற்களை
சேகரித்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி
அவள்
மௌனத்தைப் பழகிக் கொண்டிருந்ததும் 
அந்த நாட்களில் தான் 
பெரும் நெருப்பின் தீப் பூ எனவும் 
மேலும்
தீயினைப் பருகிக் களிக்கும் தீப்பறவை எனவும்   
அவனே  உணர்த்தியிருந்தான்
நெருப்புடன் நெருக்கம் கொண்டாடி தன்னையே நெருப்புப் பறவையாய் உணரும் சிறகடிப்பு,அத்துடன் நிற்கவில்லை.  
பின்பொரு சமயம்
செழித்திருந்த கரும்புத் தோட்டத்தைப் பார்க்கிறேன்
ஒரு துண்டு கரும்பில்
பற்றி எறியும் தீச் சுடரைக் கண்டேன்  
கரும்பின் ஒரு துண்டு இனிப்பில்
தீயின் சுவை கண்டேன்
என்கிறார் சக்திஜோதி.
கொன்றிடும் என இனிதாய்-இன்பக்
கொடுநெருப்பாய்- அனல் சுவையமுதாய்  என்று பாடிய பாரதி கரும்புத்தோட்டத்தில் சுவைத்தது கண்ணீரின் சுவை. சக்திஜோதி கண்டுணர்ந்தது தீயின் சுவை.
இயற்கையின் தீவிரமான தருணங்கள் இயற்கைப் பேரழிவு என்றும் இயற்கை சீற்றம் பெயர்சூட்டப்படுவதுண்டு.ஆனால் அதுவும் இயற்கையின் வரம்பறியா நேசமென்றே வகைப்படுத்தப்படுகிறது.
“தீ
நகர்வதற்கான ஒரு பாதை
இந்த நிலத்தில்
இந்த வானத்தில் இல்லை

பாதைகள் நேராகச் செல்லும்
வளைந்து வளைந்து செல்லும்
சட்டென்று இடது புறமாகவோ
பட்டென்று வலது புறமாகவோ
அல்லது
திரும்பிச் செல்வது போலவோ

பாதைகளின் பாதை இருக்கின்றன

ஒருபோதும்
இவ்விதிகளுக்குக் கட்டுப்பட்டதல்ல
நெருப்பென்னும் தீ 

அது பரவி அழிக்கிறது
கசடுகளை
ஒவ்வாதவைகளை
தீமைகளை
இன்னும் பலவற்றை
அன்பையும் காமத்தையும் தவிர.” என்கிறார்.
“யானை மீதேறி 
நதிக்கரையோரம் வருபவனை 
மூங்கில் புதர்களினூடே மறைந்து நின்று பார்க்கிறேன் 
நதிநீர் விளையாடிப் பிளிறித் திரும்பும் யானை 
உதிர்ந்த வேங்கை மலர்கண்டு 
பாதை திரும்புகையில் 
கார்காலத்தின் கடுங்குளிருக்கு 
மரப்பொந்துகளில் ஒடுங்கியிருந்த பறவைகள் 
சிறகடித்து வெளியேறின 
என்கிற கவிதை குறிஞ்சி நிலக் கவிதைக்கான அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளது.
சக்திஜோதியின் காதல் தலைவி எந்த நிலத்தவளாக இருந்தாலும் அவள் வாழ்வின் நுண்கணங்கள் அனைத்திலும் ஒரு பறவை வந்தவண்ணம் இருக்கிறது.
முல்லை நிலத்துக் காதல் என்று சொல்லத்தக்க கவிதை ஒன்றில் பாருங்கள்:
“மலையடிவாரத்தில்
பசுக்களின் மணியோசைகளுக்கூடே
அவர்கள் பிரிகின்றனர்
ஆவினங்களின் நடை
ஆடுகளின் மேய்ச்சல் குரல்
அவனது நிழலைக் கடந்து பின்செல்கிறது
பசுக்கள் மடிநிறைந்து
பாறைகளில் கசிய விட்டிருந்த பால்துளிகளில்
அவளின் கண்ணீர்த் துளிகளும் படர்கிறது
———–
———-
——–
பறவையின் நிழல்
ஆகாயத்திலிருந்து விழும்பொழுது
அவளை விட்டு வெகுதூரம் சென்றிருந்தான்.”
(எனக்கான ஆகாயம்-106/107) 
இவர் காட்டும் இன்னொரு குறிஞ்சி நிலக்காட்சி:
“தழையாடை உடுத்தி
தேவதையெனச் சுற்றித் திரியும்
கொடிச்சி ஒருத்தி
குறிஞ்சி நிலமெங்கும் காட்டுப்பூக்களை
பறித்துச் சேகரித்துக் கொண்டிருந்தாள்

நீலமணிப் பூக்கள் சூட்டியிருந்த
கூந்தலை படர்த்தி நடக்கிறாள் வனமெங்கும்

மலையின் அடிவாரத்திலிருந்து
காற்றுடன் கலந்து பரவிய
நடவுப் பாடலின் வரிகளில்
லயித்திருந்தாள்

வயல்மேல் பறக்கும் குருவிகள்
சேகரித்த தானியங்களை
குஞ்சுப் பறவைகளுக்கு கொண்டு செல்கின்றன

மலைப்பாதையில்
தெரிகிற நிழலுருவம் கண்டு
ஏமாறுகிற கொடிச்சி
கூடை நிரம்பிய பூக்களுடன் வீடு திரும்புகிறாள்.”

ஐம்பூதங்களுடனான அணுக்கம் இந்தப் பெண்ணை இயற்கைபோலவே நடுநிலை கொண்டதாய் நிபந்தனையற்றதாய் மாற்றிவிடுகிறது.  
அவள்
ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறாள்

காற்றைப் பருகுபவளாகவும்
காற்றைப் பருகத் தருபவளாகவும்.”

என்றும்,பிறிதோரிடத்தில்
மழைக்காலம்
காற்றுக்காலம்
பனிக்காலம்
ஒன்றும் இல்லை அவளுக்கு
ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறது அன்பின் காலம்”
என்றும் சக்திஜோதி சொல்கையில், அன்று மனிதர்கள் இப்படித்தானே இருந்தார்கள்” என்ற பெருமூச்சோடு பக்கங்களைப் புரட்டுகிறேன். சங்ககாலத்தின் இயற்கை வளமும் மன வளமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதும் புரிகிறது. 
அதனால்தான் குளிர்போல்,பனி போல், மழைபோல் வெய்யிலும் விருப்பத்திற்குரியதாகிறது.
வெயில் தினங்கள் தகிக்கும் காமத்தைப்போல
எப்போதுமே அடர்ந்திருகின்றதென
ஆதிவாசனையை  வியர்வையென
உணர்ந்த கணத்தில் நினைத்துக்கொண்டாள் “ என்றும்,
ஏப்ரல் மாதத்தின் வெம்மை
வாசனை மிக்கது
உதிர்இலைகளுக்கும்
வேம்பின் பூக்களுக்கும் இடையே
உணர்கிற இந்த வாசனை
வியர்வை படிந்திருக்கும்
காமத்தைப்போல
மிகக் கடுமையானது” என்றும்

ஏப்ரல் மாதத்தின் வெம்மை
வழிப்போக்கனின் பாடல் போன்றது
பூர்வகுடியின் ஆதிமொழியை
மொழிபெயர்க்கும் விருப்பத்துடன்
வீதியெங்கும் இசைக்குறிப்புக்களை
ஒலித்தபடியிருக்கிறது
அவை
அந்நியர்களும் உணர்ந்துகொள்ளும்படி
எங்கும் படர்ந்திருக்கிறது. “
*
ஏப்ரல் மாதத்தின் வெம்மை
வெண்மை நிறத்தில் இருக்கிறது
அகன்ற வானத்தில் மிதக்கும்
வெண்மேகம்போல மென்மை போர்த்துகிறது
காற்றின் இருப்பை உணர்த்துகிறது”
என்றும் எழுதுகிறார் சக்திஜோதி.
இந்தப் புரிதலின் காரணமாகவே முகிலடர்ந்த நாளில் வெய்யில் நடத்தும் போராட்டம் இவருக்கு விளங்குகிறது. 
“வெயில் வெற்றி பெற
முயற்சித்துக் கொண்டேயிருக்கிறது.
மேகங்கள் நகர்வதாய் இல்லை
மேக நிழலில்
மனிதர்கள்
விலங்குகள்
கட்டடங்கள்
எல்லாம் மகிழ்ந்து கொண்டிருக்கிறபொழுதில்
வெயிலின் கண்களிலிருந்து
இரண்டு சொட்டு கண்ணீர்த்துளிகள் விழுகிறது
விழுந்து கொண்டேயிருக்கிறது

அதைப் பார்த்துக் கொண்டிருந்த காற்று
மேகத்தை விலக்க முயற்சிக்க
நிலவு
மேற்கில் உதிக்கிறது

வெயிலின் கண்ணீர்த் துளிகள்
மேகத்தில் படவும் இல்லை
நிலம் புகவும் இல்லை”

என்கிறார். வெய்யிலின் கண்ணீர்த் துளியை தரிசிக்கவும் ஸ்பரிசிக்கவும் சில கணங்கள் வாய்ப்பதுதான் எவ்வளவு அற்புதமானது.
(பறவை வரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *