பால்வெளி விரித்த படுக்கையின் விரிப்பில்

நூறு சுருக்கங்கள் நீவி நிமிர்கையில்
காலப் போர்வையைக் கைகளில் மடிக்கும்
காதல் பெருக நின்றிருந்தாய் நீ…
நிகழ்கணம் மீது நித்திரை கொண்ட என்
இதழ்களில் ஏதோ எழுத வந்தவள்
கீற்று வெளிச்சம் வீசிய வெய்யில்
திகைக்கும் படியாய்திரைச்சீலை இழுத்தாய்.
அந்தக் கணமே அடர்ந்த இருளின்
நதியில் இறங்கி நீந்திய உன்னைப்
படகென உணர்ந்து பாய்ந்தேறியதும்
துடுப்புகள் கைக்குத் தட்டுப்பட்டன..
அந்தகார இருள்மிசை துலங்கிய
நட்சத்திரங்கள்  இரண்டின் வெளிச்சம்
இன்னும் உந்த என்னைத் தூண்ட
இன்னும் இன்னும் என்று சீண்ட
ஈரப் படகின்  இயங்கு கதியில்
மிதப்பின் சுகத்தில் மயங்கியும் பதறியும்
துடுப்பின் பிடிகள் விலக்கியும் இறுக்கியும்
போகப் போக போதை சூழ்ந்தது..
யாரைக் கேட்டு கரைவந்து சேர்ந்தது??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *