அவள் தரும் லஹரியில் அவளது பெயரினை
உளறுதல் ஒருசுகமே
பவவினை சுமைகளும் அவளது திருவிழி
படப்பட சுடரெழுமே
சிவமெனும் சுருதியில் லயமென இசைகையில்
சிறுமியின் பரவசமே
புவனமும் அவளது கருவினில் தினம்தினம்
வளர்வது அதிசயமே

நதிமிசை பெருகிடும் அலைகளில் அவளது
நெடுங்குழல் புரண்டு வரும்
சிதைமிசை எழுகிற கனலினை அவளது
சிறுவிரல் வருடிவிடும்
விதியதன் முதுகினில் பதிகிற எழிற்பதம்
வினைகளைக் கரையவிடும்
மதியென எழுகிற திருமுக ஒளியினில்
கதிர்மிசை சுடருமெழும்

கனல்பொழி நுதல்விழி கருணையின் இருவிழி
கயலென சுழன்றிடுமே
மனமெனும் சிறுகுடில் தனிலவள் நுழைகையில்
மிகுமங்கு   ஸ்ரீபுரமே
பனிபடர் மலரிடை பரவிடும் சுகந்தமும்
பரிபுரை திருவுளமே
இனிவரும் உயிர்களும் இவளது மடியினில்
இருந்தபின் கரைந்திடுமே

நிலமிசை நெளிகிற சிறுபுழு அசைவுகள்
நிகழ்வதும் அவளருளே
மலைகளை விழுங்கிடும் பிரளய வரவுகள்
அதிர்வதும் அவள்செயலே
உலைகொதி அரிசியில் உலகெழு பரிதியில்
உமையவள் அருள்நலமே
இலைபயம் இலையென இதழ்வரும் ஒளிநகை
எமைநலம் புரிந்திடுமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *