எத்தனை இரவுகள் விடிந்தாலென்ன?
எனது கனவுகள் கலைவதாயில்லை.
இடைவெளியின்றி இந்த நீளத்தில்
எவருக்கும் கனவுகள் வந்திருக்காது.
பூமியில் முதன்முதல் புலர்ந்த விடியலைக்
கண்கொண்டு பார்த்ததாய்த் தொடங்கிய கனவு
யுகங்கள் கடந்த பின்வழிப் பயணமாய்
இன்னும் இன்னும் தொடருகின்றது.
புத்தர் காலத்தில் தாவரமாக
ஏசு காலத்தில் பசுங்கிளியாக
எண்ணரும் பிறவிகள் இங்கே இருந்ததாய்
மனத்திரைக்குள்ளே சத்திய சாட்சிகள்.
இரக்கமில்லாத மரணங்கள் முடிந்தும்
இறக்க மறுக்கும் என்னுயிருக்கு
கைப்பிள்ளைக்குக் காட்டும் பொம்மைபோல்
கனவுத் தொடரைக் காட்டி வருகிறேன்.
இப்போதெழும்பும் எந்தக் குரலையும்
என் குரலென்று நான் எண்ணுவதில்லை.
பிறந்த குழந்தையின் வீறிடலாக,
பருவ வயதின் பிதற்றல்களாக,
நடுத்தர வயதின் திமிர்க்குரலாக,
தளர்ந்த முதுமையின் புலம்புகளாக
எத்தனை குரல்களில் எழுப்பியதென்னுயிர்,
இத்தனை குரல்களில் எதுதான் என் குரல்?
இத்தனை உடல்களில் எதுதான் என்னுடல்?
கனவுக் குவியலின் நடுவிலெதுவும்
பதில்கள் கிடைக்குமா… பார்த்து வருகிறேன்
பிடித்த பாடல்களுக் காகப்
படத்தை முழுவதும் பார்க்கிற ரசிகனாய்
உயிரின் மூலம் உணர்வதற்காகக்
கனவின் தொடரைப் பொறுமையாய்ப் பார்க்கிறேன்
தொடர்வின் முடிவில் எதுவும் நேரலாம்.
படச்சுருள் தீர்ந்தும் பதில் கிடைக்காமல்
ஏமாற்றத்துடன் எழுந்து நான் போகலாம்.
பொருத்தமான பதிலொன்று கிடைத்தால்
அந்த அதிர்ச்சியில்… என் ஆன்மா சாகலாம்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *