சத்சங்கத்தின் சரண தியானத்துடன்
புத்த பூர்ணிமா பொழுதின் துவக்கம்.
மூடிய இமைகள் மெதுவாய்த் திறந்ததும்
வானக் கவிதையாய் வண்ண வெண்ணிலவு
கிழக்கிலிருந்து கிளர்கிற ஞானமாய்
தகதகக்கின்ற தங்க அற்புதம்;
பூஜ்ய வடிவம், பூரண சூன்யம்.
நிகழும் அசைவே வெளித்தெரியாமல்
நடுவான் நோக்கி நகரும் நளினம்.
உள்ளளி போல உயர எழும்பும்
வெண்ணிலவோடு விழிகளின் பயணம்.

ஆன்மாவுக்கு சிறகு முளைத்து
ஆகாயத்தில் பறப்பதுபோல…
நீலவானத்தில் மிதந்து மிதந்து
பால்நிலவோடு கலப்பது போல…
காலவெளியைக் கடந்து கடந்து
மூலக்கனலில் லயிப்பது போல…
ஏகாந்தத்துடன் இழைந்து இழைந்து
தானெனும் ஒன்றை ஜெயிப்பது போல…
அமைதியின் மடியில் அமுதத்தின் சாரம்.
மௌனப் புரட்சியின் மகத்துவ ஞானம்.
புத்தனாய் மலரும் பாதையில் நடந்த
சித்தார்த்தனைப் போல் சிறிது நேரம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *