காலம் எழுதும் குறிப்பேட்டில் – உன்
கனவுகள் நிலுவையில் உள்ளன!
ஆலாய் பறக்கும் மானிடனே – உன்
ஆசைகள் எங்கே போயின
நீலம் நுரைக்கும் ஆகாயம் – நீ
நிமிரும் நாளெதிர் பார்த்திடும்
வேலைகள் தொடங்கிடு வேகமாய் – உன்
வெற்றிகள் அழகாய்ப் பூத்திடும்!

நானா செய்வேன் என்றிருந்தால் – நீ
நிற்கிற இடத்தில் நின்றிடு
தானாய் வரும் பலம் தெளிந்திருந்தால் – நீ
திசைகள் எட்டும் வென்றிடு!
ஏதோ இதுவரை சோம்பி நின்றாய் – அட
இனிமே லாவது எழுந்திடு
ஆனவரை செயல் தொடர்ந்திடுவாய் – நீ
ஆற்றலின் வடிவாய் ஒளிர்ந்திடு

பாதைகள் நீள்வது புதியதில்லை – உன்
பாதங்கள் தொடங்கட்டும் பயணம்
கீதைகள் ஒலிப்பது புதியதில்லை – நீ
கிள்ளி எறிந்திடு சலனம்
சாதனை என்பது கடினமில்லை – நீ
செயல்பட நினைத்தால் சுலபம்
போதனை மட்டும் போதாது – உன்
பணியால் மகிழட்டும் உலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *