மதுரைநகர் வீதிகளில் மகேசா நீவா
மறுபடியும் நெற்றிக்கண் திறக்க நீவா
குதிரைவிற்க வந்தவனே கிளம்பி நீவா
குடிமுழுகப் போகுதய்யா உடனே நீவா
உதிரிகளை பீடத்தில் ஏற்றிவைக்க
உளுத்தகட்டை துணிந்ததய்யா இறைவா நீவா
புதிர்களுக்கு விடைகாணப் புனிதா நீவா
பரமேசா விடையேறி விரைவாய் நீவா
மாடத்தில் ஒளிர்கின்ற விளக்கின் மேலே
மண்ணள்ளிப் போட்டால்தான் ஒளிரும் என்று
மூடத்தின் முழுவெல்லை கண்டவர்கள்
முதலறிக்கை தந்துவிட்டார் முதலே நீவா
பீடத்தின் அரும்பெருமை புரிந்திடாமல்
பிட்டத்தை இதுவரையில் வைத்துத் தேய்த்தோர்
ஓடத்தைக் கவிழ்க்குமுன்னே ஓடி நீவா
உத்தமனே உன்பெருமை காக்க நீவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *