ஆன்மீகம் எல்லாவற்றையும் அதன் இயல்புப்படியே ஏற்கச் சொல்கிறது. உலகியல் வாழ்க்கையோ எல்லாப் போராட்டங்களிலும் வெல்லச் சொல்கிறது. இவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக இல்லையா?
– உமா, கோவை.

ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ளவர்களைப் பொறுத்தவரை உலகியலென்பதும் ஆன்மீகம் என்பதும் வெவ்வேறில்லை. உலகியலின் ஒவ்வோர் அம்சத்தையும் ஆன்மீகத் தன்மையுடன் செய்கையில் இந்த இடைவெளி அழிந்துவிடும்.
ஒரு போராட்டமான சூழல் ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தப் போராட்டமான சூழலை எதிர்கொள்ள வேண்டுமே தவிர எதிர்ப்புணர்வு தேவையில்லை.
தனக்கு வந்துள்ளது போராட்டமான சூழல் என்பதை முதலில் ஏற்றுக் கொண்டால்தான் அந்தப் போராட்டத்தை வெல்லும் சூழலை உருவாக்க முடியும். அதேநேரம் ஆன்மீகம் இன்னொன்றையும் செய்கிறது.
ஒரு போராட்டத்தில் வெல்வதற்கான முழு ஏற்பாடுகள் எவையோ அவற்றை முழுமையாகச் செய்யும் போதே அந்தச் செயலுடன் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளாத பக்குவத்தை ஆன்மீகம் தருகிறது.
அவரவர் வயிற்றுப் பாட்டுக்கான ஆதாரச் செயல்களை செய்யும் போதும் அதிலிருந்து தள்ளிநின்று செய்யவும் முழுமையான திறமை வெளிப்படும் விதமாய் செயல்படவும் வேண்டிய வல்லமையை ஆன்மீகம் அளிக்கிறது.
உலகியல் முழுமைக்கான தேடல்.
ஆன்மீகம் முழுமைக்கான தீர்வு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *