புலரிபோல் வெளிச்சம் பொய்யாத் தோன்றிய
பின்னிராப் போழ்தினில் பெய்தது பேய் மழை.
கரிய முகிலின் கனவுகள் கலைந்து
தரையில் விழுந்தன தண்ணீர்த் தாரைகள்.
உறக்கத்திலிருந்து உசுப்பப்பட்ட
தாவரங்கள் தலைக்குக் குளித்தன.
பறவைக் கூட்டில் பரவச முனகல்.
தெப்போற்சவத்தில் தெருநாய்க் கூட்டம் &
குளிர்ந்த புல்வெளியைக் கற்பனை செய்த
கறவைகளுடைய கண்களில் வெளிச்சம் &
விரிந்து கிடக்கின்ற மணற்பரப்பிற்கோ
விழுகிற மழைத்துளி வாசனைத் திரவியம்.
பூமி சிலிர்த்த பண்டிகைப் பொழுதில்
போர்வைக் கல்லைறையில் புதைந்த மனிதர்கள்.
மழைக்கணக்கெழுதிய கடவுளின் கைகள்
விரயக் கணக்கில் பதிவு செய்தன…
கடல்மேல் விழுந்த துளிகளோடு
கட்டிடம் மீது விழுந்தவற்றையும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *