முந்தைய பாடலின் நீட்சியாகவும் சிவானந்தம் என்னும்
அற்புதத்தில் ஆழ்ந்து திளைக்கும் ஆனந்தத்தின் வெளிப்பாடாகவும்
இப்பாடல் அமைகிறது.சிவமாகிய தீர்த்தத்தில் நீந்திக் களித்து
விளையாடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை.

தானே தீர்த்தனாய் வினைகளை தீர்ப்பவனாய் விளங்கும் இறைவன்
சிற்றம்பலத்தில் அனலேந்தி ஆடுகிற கூத்தனாய் திகழ்கிறான்.
பிரபஞ்சம் முழுவதையும் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல்
அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் செய்கிறான்.

அவன் புகழ்பாடும் வார்த்தைகள் பாடி கைவளை குலுங்க
ஆடை அணிகள் ஆர்த்து ஒலியெழுப்ப,கூந்தலின் மேலே வண்டுகள்
ஆர்க்க,பூக்கள் கொண்டபொய்கையில் குடைந்தாடி,உடையவனாம்
சிவனுடைய திருவடிகளைப் போற்றி இருஞ்சுனையில்
நீராடுவோம்” என்கின்றனர்.

தாமரை சூழந்த பொய்கை,சிவபெருமானின் திருவடித் தாமரையைக் குறிக்கும்
அதில்ஆர்க்கிற வண்டுகள் இப்போதுஇப்பெண்களின் கூந்தலின் மேல்
ஆர்க்கின்றன.என்ன காரணமென்றால் அவர்கள் சென்னிமிசைசிவபெருமான் பாதமலர்கள் சூட்டினான்
என்பதேயாகும்.அதேபோல பூத்திகழும் பொய்கை என்றவர் அடுத்த
வரியிலேயே இருஞ்சுனை என்கிறார். மலைபோன்ற சுனை என்று
நேரடிப் பொருள் இருந்தாலும்,நல்வினை தீவினை ஆகிய இரண்டும்
கலந்த வாழ்வென்னும் சுனையில் நீராடி சிவனருளால் அதனைக்
கடக்கும் பத்திமையும் வலியுறுத்தப்படுகிறது

ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *