இந்தப் பாடலில் ஒரு குட்டு வெளிப்படுகிறது.ஆங்கிலத்தில் the cat
is out என்பார்கள்.தோழிகள்,அதுவும் தினமும் பழகுபவர்கள்,மறுநாள் காலை
வருவதாக முன்னறிவிப்பு தந்தவர்கள்,தெருவில் சிவநாமத்தைப் பாடி வருகையில்
படுக்கையில் துடித்துப் புரள்வதும் மூர்ச்சையாவதும் சமாதி நிலைக்குப் போவதும்
ஏன்நிகழ்கிறது?சிவநாமம் ஏற்படுத்தும் அதிர்வுகளைப்போலவே இன்னொரு சக்தி
மிக்க அனுபவமும் இப்பெண்களுக்கு நேர்ந்துள்ளது. பிரம்ம முகூர்த்தப் பொழுதில்,
சிவநாம சங்கமத்தில் சிவனுடைய இருப்பை சூட்சுமமாக உணர்ந்திருக்கின்றனர்.
அந்த தன்மையின் வீச்சைத் தாங்க மாட்டாமல் மூர்ச்சித்து விழுதலும் சமாதிநிலை
அடைதலும்நிகழ்ந்திருக்கின்றன.
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை

என்னும் வரிகள் இதனை உறுதி செய்கின்றன. சிவனைக் காண வேண்டும் என்னும்
தவிப்பில் ஏங்கும் அடியார்கள் பால் ஏதோ இன்பமிருக்கிறதென்று சிவன்தேடி வருகிறான்.
அது , “சிவனை நான் காண்பேன் என்னும் அகங்காரமல்ல.’சிவனை நான் காண மாட்டேனா”
என்னும் ஏக்கம்.பக்தியின் உருக்கம். சிவனின் அடிமுடி தேடிய திருமால் பிரம்மா ஆகியோரிடம்
இத்தன்மை காணப்படவில்லை.அந்த இருவரையும் விட மனிதர்களிடம் குற்றம் குறை மிகுதியாய்
இருப்பது இயல்பு.ஆனால் அவர்களின் கள்ளமில் பக்திக்காகவும் ஏக்கத்திற்காகவும் இறைவனே வந்து
குறைகள் களைந்து அவர்களுக்குத் தன் திருவடிகளைத் தந்து அருளாகிய அமுதையும் தருகிறான்.

அவனைப் பாடி நீராடுங்கள் என்பது இப்பாடலின் திரண்ட கருத்து.

செங்கணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம் பாலதாக்
கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *