வெளிப்படையாய் இந்தப் பாடலுக்குத் தென்படும் உரை,ஒரு பெண்ணைப் பழிப்பதுபோல் உள்ளது. திருமாலும் நான்முகனும் அறியா சிவனை நாம் அறிவோம் என்று இனிய சொற்களால் பொய்யுரைத்த பெண்ணே !கதவைத்திற!அண்ணும் விண்ணும் அறியவொண்ணா மகாதேவன் நம்மை ஆட்கொண்டு சீராட்ட வருகிற சீலத்தைப் பாடி சிவனே சிவனே என ஓலமிட்டு நாங்கள் வீதிவழி வருவதை நீ அறியமாட்டாயா” என்பது வெளிப்படையான பொருள்.

இதிலுள்ள முரண்பாட்டை நம்மால் உணரமுடிகிறது.ஒருபக்கம் மாலும் அயனும் அறியவொண்ணா இறைவனை அறிவோம் என்பதை பொய் என்கிறார்கள்.ஆனால் அந்தப் பெண்களே விண்ணும் மண்ணும் அறியவொண்ணா சிவன் நமக்காக எளி வந்த கோலத்தில் வந்து சீராட்டுவான் என்கிறார்கள்.

“காட்டுவித்தால் யாரொருவர் காணாதாரே” என்றார் திருநாவுக்கரசர்.சிவனை நாம்நன்கறிவோம் என்று சொன்னவளின் சொல் பாலொடு தேன் கலந்தாற்போல் இருந்ததாம். இதில் பாலாக இனிப்பது எது? தேனாக இனிப்பது எது? பால்,பிறருக்குக் காட்டுவேன் என்னும் உறுதிமொழி உள்ளனுபவத்தில் ஊறிவருகிற சிவானந்தத் தேன்.

குருவின் நிலையில் இருக்கக்கூடிய பெண் பிற பெண்களை பக்தி கனியட்டும் என்று காத்திருக்கச் செய்கிறாள்.அவர்களுக்கு சிவனின் எளிவந்த தன்மையும் புரிகிறது. வழிகாட்டியின் சொற்களில் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மாறி மாறி வ்வருகிறது. தங்கள் தவிப்பை உணர்ந்து குருவானவர்(ள்) சிவத்தை காட்டுவிக்கக்கூடாதா என்னும் ஏக்கம் இப்பாடலில் வெளிப்படுகிறது

மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *