திருவெம்பாவையில் சூட்சுமத் தன்மை மிக்க பாடல்களில் இதுவும் ஒன்று.பறவைகள் சிலம்பும் சங்கம் இயம்பும் என்கிற நயங்களைத் தாண்டி வருகையில் பறவைகள் சிலம்பும் ஒலியும் சங்கம் இயம்பும் ஒலியும் கடந்துபரஞ்சோதியின் ஒளி எழுகிறது. ஒளிக்கும் ஒலிக்குமான சூட்சுமத் தொடர்பும் அதன் விளைவாய் எழும் கருணையுமாய் பாடல் துலக்கம் கொள்கிறது. மந்திர செபத்தால் உள்ளே எழும் சிவசோதியானது பெருங்கருணை பாலிக்க அந்தக் கருணையே நிலையான செல்வமாய் அமைகிறது.இதனை குருவாகிய தோழி தியானத்தால் எட்டினாள் என்பதை அடியார்கள் உணர்ந்து, அதுவே சிவத்தியானம் மேற்கொண்ட திருமாலின் அறிதுயிலுக்கு நிகரானதென்பதை உனர்ந்து போற்றுகிறார்கள். தூங்காமல் தூங்கி சுகம்பெறுவது எக்காலம் என்றார் தாயுமானவர்.
அந்நிலையை அன்பனுபவமாய்ப் பெற்ற குரு தன் சிவானந்தத்தை சொற்களால் விவரிக்க வேண்டுமென விண்ணப்பிக்கும் விதமாக ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய் என அடியார்கள் விண்ணப்பிக்கிறார்கள். கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும் ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய்