மூடிக் கிடந்த குளிர்பெட்டி – அதில்
மூச்சினைத் தொலைத்துக் கிடந்தானே
பாடி முடிந்த கீர்த்தனையாய் – எங்கள்
பாட்டுடைத் தலைவன் தெரிந்தானே
மேடுகள் ஏறிய ஜீவநதி – நெடும்
மௌனத்தில் தூங்கிய தருணமிது
கூடு கிடத்தி சிறகடித்தான் – ஒரு
கனல்பறவை கொண்ட மரணமிது

மீசை வருடும் இருகரங்கள் – அவன்
மார்புக் கூட்டினில் கோர்த்திருக்க
வீசும் வெளிச்ச விழியிரண்டும் – ஒரு
விடுகதை போலத் துயின்றிருக்க
பேசி உலுக்கிய இதழிரண்டும் – ஒரு
பிரளய முடிவென ஓய்ந்திருக்க
ஆசைத் தமிழன் ஜெயகாந்தன் – அங்கே
அமைதி பருகிப் படுத்திருந்தான்

சந்தடி இல்லா ஆகாயம் – என
சலனமில் லாமல் கிடந்தானே
வந்தவர் போனவர் ஆயிரமாம் – அவன்
வரவேற்காமல் துயின்றானே
வந்தவன் வானத் தமரனல்ல – ஆனால்
வழக்க மாய்வரும் மனிதனல்ல
சொந்தச் சுவடால் பாதைசெய்தான் – அதில்
சூரியப் பயணம் செய்திருந்தான்

மேடைகள் அவனது ஆடுகளம் – அதில்
மேன்மைக் குணங்கள் வளர்த்திருந்தான்
ஏடுகள் அவனது தாய்மடியாம் – அதில்
எத்தனை வித்தகம் காட்டிநின்றான்
நாடகத் திரைப்படம் சிவதனுசு – அதை
நாயகன் அவன்தான் வளைத்துநின்றான்
மூடர்கள் அகந்தை மிதித்தெறியும் – நல்ல
மும்மத வேழமாய் இங்கிருந்தான்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *