முடிவிலாப் பாதையில் முகமிலா மனிதர்கள்
இதழிலாப் புன்னகை சிந்திய பொழுது
இரவிலா நிலவினை மழையிலா முகில்களும்
நிறமிலா வெண்மையில் மூடிய பொழுது
விடிவிலாச் சூரியன் வழியிலாப் பாதையில்
தடையிலா சுவரினைத் தாண்டிய பொழுது
கடலிலாச் சமுத்திரம் கரையிலா மணலினில்
பதிலிலாக் கேள்வியாய் மோதிடும் அழுது

யுகமிலாத் தேதியை நகமிலா விரல்களால்
கரமிலாக் காலமும் கிழிக்கிற நொடியில்
ஜெகமிலா பூமியின் நகர்விலா சுழற்சியை
வடிவிலாக் கோள்களும் மறிக்கிற பொழுதில்
சுகமிலாச் சுகங்களை நிலையிலா நிரந்தரம்
வலியிலா வலியென உணர்த்திடும் நிலையில்
அகமிலா அகந்தனில் விரிவுறா வெளியினில்
குணமிலா இறைநிலை குலவும்நம் உயிரில்

அரணிலாக் காவலின் அசைவிலா விசையினில்
திரையிலா மறைப்புகள் மறைகிற காட்சி
உரனிலா வலிமையின் ஒழுங்கிலா ஒழுங்கினில்
சரியிலா நீதிகள் சரிகிற மாட்சி
தருவிலாக் கனிகளும் திருவிலாச் செல்வமும்
வரைவிலா வரைமுறை வகுக்கிற சூழ்ச்சி
முரணிலாக் கவிதைகள் முள்ளிலா நெருஞ்சியாய்
முன்வரா முதல்வனின் மறைமுக ஆட்சி
.

Comments

  1. கவிதை அருமை!
    இப்படித் தான் ஆல்பர்ட் ஹிட்ச்காக் படத்தில் ஒருவர் படு காஷுவலாய்,தலையை கையில் வைத்துக் கொண்டிருப்பார், ஹெல்மட் போல்!

    பொங்கல் வாழ்த்துக்களுடன்,

    ஆர்.ஆர்.ஆர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *