மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…

வண்டு துளைத்த மூங்கிலாக
வாழ்க்கை வேண்டிப் பிரார்த்தனை
வந்து புகுந்து போகும் காற்று
வானில் கலக்கும் கீர்த்தனை

காற்றின் உதடு தீண்டும் போது
கீதம் பிறக்கும் தத்துவம்
ஊற்றெடுக்கும் இசையின் மடியில்
உலகம் உறங்கும் அற்புதம்

மனித வாழ்க்கை தந்ததென்ன?
மனது முழுக்க ரணங்களே!
புனிதமான மூங்கிலாகப்
பிறந்து வந்தால் சுகங்களே!

மூங்கில் இரண்டு உரசும் போது
மூளும் கனலும் ராகமே!
ஏங்கிப் புலம்பும் ஏழை நெஞ்சே
மூங்கில் வாழ்க்கை போதுமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *