மாத்திரைப் போதவள் முகந்தெரியும்-ஒரு
மின்னற் பொழுதினில் மறைந்துவிடும்
ஊர்த்துவம் ஆடிடும் சலங்கையொலி-மிக
உற்றுக் கவனிக்கக் காதில்விழும்
தீர்த்தக் கரைகள் எங்கணுமே -எங்கள்
தேவியின் காலடி பதிந்திருக்கும்
வார்த்தைகள் தேடிடும் வேளையிலே-அவள்
வண்ணப்பொன் அதரங்கள் முணுமுணுக்கும்

சந்நிதி சேர்கிற வேளையினில்-நெஞ்சின்
சஞ்சலம் கண்களில் பொங்குகையில்
என்கதி என்னென்று ஏங்குகையில்-அவள்
இன்பக் குறுநகை கண்ணில் படும்
சின்னக் குழந்தையின் சொல்வழியே-அவள்
சொல்ல நினைத்தது சொல்லப்படும்
என்னை அழுத்திடும் பாரமெல்லாம்-அவள்
எண்ணும் பொழுதினில் வெல்லப்படும்

தூண்டில் முனையினில் மண்புழுவாய்-பின்
தூண்டிலில் சிக்கிய செங்கயலாய்
நீண்டிடும் எந்தன் தவிதவிப்பை-வந்து
நிர்மலை மாற்றிடும் நேரமிது
தீண்டும் நெருப்பினில் சுட்டெடுத்துப்-பசுந்
தங்கமென் றாக்கிட எண்ணம்கொண்டாள்
தாண்டவ நாயகன் பக்கம்நின்றும்-நம்மை
தாய்மை ததும்பிடப் பார்த்திருப்பாள்

யாதுமென்றாயினள் யாரிவளோ -அண்டம்
எங்கும் நிறைந்திடும் பேரொளியோ
மாதுமை தாளன்றி யார்நிழலோ-என்
மாசுகள் நீக்கிடும் பேய்த்தழலோ
ஓதிடும் வார்த்தைகள் யாவிலுமே-அவள்
உட்பொருள் ஆனபின் அச்சமில்லை
பாதங்கள் பற்றிடும் ஞானம்வந்தால்-பின்னர்
பற்றுக்கள் ஏதொன்றும் மிச்சமில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *