பைரவி வந்தாள் பைரவி வந்தாள்

பத்துத் திசையதிர
ஷங்கரி வந்தாள் ஷாமளை வந்தாள்
எங்கள் உளம் குளிர
கண்ணொரு மூன்றிலும் மின்னும் நெருப்புடன்
அன்னை உருவெடுத்தாள்
எண்ணிய காரியம் யாவும் நடத்திட
இங்கு குடிபுகுந்தாள்

யோகத் தலமல்லவா-இது
தியானத் தலமல்லவா
மோகத்திருவுருவாய்- எங்கள்
பைரவி வந்தமர்ந்தாள்
லிங்க வளாகத்திலே-ஒரு
ரௌத்திரக் கோலத்திலே
பொங்கும் ஒளியாக-அன்னை
பேரருள் செய்ய வந்தாள்

கேட்ட வரம் கொடுப்பாள் -அன்னை
கேடுகள் நீக்கிடுவாள்
ஆட்டங்கள் ஆடிடுவாள் -அன்னை
அச்சந் தொலைத்திடுவாள்
ஊட்டங் கொடுத்திடுவாள்-அன்னை
ஊக்கங் கொடுத்திடுவாள்
வாட்டங்கள் போக்கிடுவாள்-அன்னை
வேண்டும் நலங்கொடுப்பாள்

ஆசையுடன் தொழுதால்-அவள்
ஆனவினை துடைப்பாள்
ஓசைதரும் எதிலும் -அவள்
ஓங்காரம் ஆகிடுவாள்
பேச இனியவளாம்-லிங்க
பைரவி வந்துவிட்டாள்
ஈஷாவில் இன்னும்பல
அற்புதம் செய்ய வந்தாள்

மந்திர தேவியன்றோ-அன்னை
தந்திர ராணியன்றோ
எந்திரம் ஆளுபவள்- இங்கு
என்னென்ன செய்ய வந்தாள்
முந்தி அருள் கொடுக்கும்-தியான
லிங்க வளாகத்திலே
வந்தவள் பைரவியாம்-அவளை
வந்தனை செய்திடுவோம்

Comments

  1. ஆசையா தொழ வரேன்….அருள் புரிவாய் அம்மா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *