தூரத்து வெளிச்சம் நீதானா-எனைத்
துரத்திடும் கருணை நீதானா
பாரத்தில் தவிக்கிற நேரத்திலே சுமை
தீர்ப்பது பைரவி நீதானா -என்
திசைகளைத் திறந்தவள் நீதானா
வழித்துணை யானவள் நீதானா
விழுத்துணை யானவள் நீதானா
பழிகள் நிறைந்தஎன் வழியினிலேஒளி
தருபவள் பைரவி நீதானா-உடன்
வருகிற திருவருள் நீதானா
போகிற வழியெது தெரியாதே-இந்தப்
பேதைக்கு வாழ்க்கை புரியாதே
வேகிற விறகென ஆகிற தருணம்
பாய்கிற கங்கை நீதானா-எனைப்
பவித்திரம் செய்பவள் நீதானா
நான்கொண்ட பந்தங்கள் வேதனைதான் -இந்த
நாடக வாழ்க்கையும் வேதனைதான்
வான்கொண்ட நிறமே ஆனந்த ஸ்வரமே
ஆட்கொண்ட கருணை நீதானா-எனை
ஆள்வது பைரவி நீதானா
ஆயிரம் வினைகளின் பாத்திரம்நான்-வெறும்
ஆசையின் விளைநிலம் மாத்திரம்நான்
தாயெனப் பரிந்து தீயென எழுந்து
தீவினை எரிப்பவள் நீதானா-கதி
தருபவள்பைரவி நீதானா
என்னென்ன வேடங்கள் போடுகிறேன் -நான்
என்னை எங்கெங்கு தேடுகிறேன்
 மின்னென எழுந்து கண்களைத் திறந்து
உண்மையைச் சொன்னவள் நீதானா-என்
உயிர்த்துளி பைரவி நீதானா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *