வருடங்கள் மாறும்; வயதாகும் மீண்டும்;
பருவங்கள் நிறம் மாறலாம்
உருவங்கள் மாறும் உணர்வெல்லாம் மாறும்
உலகத்தின் நிலை மாறலாம்
கருவங்கள் தீரும் கருணை உண்டாகும்
கனிவோடு நாம் வாழலாம்
ஒரு பார்வை கொண்டு ஒரு பாதை சென்று
உயர்வெல்லாம் நாம்காணலாம்!

பிழைசெய்வதுண்டு சரிசெய்வதுண்டு
பழியேதும் நிலையில்லையே
மழைகூடக் கொஞ்சம் பின் தங்கிப் போகும்
அதனாலே தவறில்லையே
இழைகூடப் பாவம் இல்லாத யாரும்
இங்கில்லை இங்கில்லையே
குழையாத சோறா குலுங்காத தேரா
குறையின்றி உலகில்லையே!

நீஉன்னை நம்பு நலம்சேரும் என்று
நிஜமாக நீவெல்லலாம்
யார் எய்த அம்பு? யார்தந்த தெம்பு?
யாருக்கும் நலம்சூழலாம்
வான் வந்த மேகம் தான் தந்து போகும்
வாழ்வெல்லாம் அதுபோலத்தான்
நாம்கொண்ட ஞானம் நாம் தந்து போனால்
நிலையாக நாம் வாழலாம்-!

– மரபின்மைந்தன் முத்தையா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *