ராஜஸ்தானில் உள்ள குக்கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் முத்தியார் அலி. புகழ்பெற்ற சூஃபி பாடகர். 2016 ஆம் ஆண்டு மஹாசிவராத்திரியில் அவருடைய இசைநிகழ்ச்சி எல்லோரையும் கவர்ந்தது.

அந்த விழாவுக்கு வந்திருந்த “இணையதளம்” திரைப்பட இயக்குநர்கள் சங்கர், சுரேஷ் முத்தியார் அலியை பாடவைக்க வேண்டுமென அப்போதே முடிவு செய்திருந்தனர்.

அதேபோல, இசையமைப்பாளர் அரோல் கரோலியிடமும் கேட்டுக்கொண்டதையட்டி, அவரும் முத்தியார் அலியுடன் தொடர்பு கொண்டு இசைவு பெற்றுவிட்டார்.

முகநூல், வாட்ஸப் போன்றவற்றில் அதீதமான ஈடுபாடு கொண்டவர்களின் போக்கை அவர்கள் குரலிலேயே விமர்சனம் செய்யும் ஒருபாடல். அவருடைய குரலில் ஒலித்தால் நன்றாக இருக்குமென இயக்குநர்கள் நினைத்தார்கள்.

அந்தப் பாடலுக்கான டிராக்கை இசையமைப்பாளர் அரோல் கரோலி முன்னதாகவே பாடி, முத்தியார் அலிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

வந்தபின் அவருக்கு வரிகளை சொல்லித் தரலாம் என்று முடிவு செய்தோம்.

தன் கிராமத்திலிருந்து பன்னிரண்டு மணி நேரங்கள் பயணம் செய்து, ஜெய்ப்பூர் வந்து விமானம் பிடித்து, அங்கிருந்து சென்னை வந்து சேர்ந்தார் முத்தியார் அலி.

கிரீன்பார்க் விடுதியிலிருந்து ஒலிப்பதிவுக் கூடத்துக்கு அவர் வந்ததும் எங்களுக்கு ஆனந்த அதிர்ச்சி. பாடல் டிராக்கை பலமுறை கேட்டு முழுவதுமாக மனப்பாடம் செய்து வந்திருந்தார்.

“வாழ்க்கை” என்ற சொல் மட்டும் அவருக்கு வரவில்லை. காரணம், அவர்கள் மொழியில் “ழ” எனும் எழுத்தே இல்லை. நீண்ட நேரம் அந்த ஒற்றை எழுத்தை உச்சரிக்க முயன்றவர், “இந்த எழுத்தை பயிற்சி செய்ய எனக்கு நேரம் வேண்டும். நாளை ஒலிப்பதிவு செய்து கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டார்.

இதில் ஓர் அதிசயம் என்னவென்றால், பயிற்சிக்காக அவருக்கு நான் சொல்லிக் கொடுத்த சொற்களில் ஒருசொல் அவருக்கு எளிதாக வந்துவிட்டது. அந்தச்சொல், “வாழைப்பழம்”.

“வாழ்க்கையில் வரும் “ழ”, வாழைப்பழத்தில் வரும் “ழ” இரண்டும் ஒன்றுதான் என்பதை அவர் புரிந்து கொள்ள மட்டுமே நேரம் ஆனது.

எனவே “ழ” கரத்தில் அவருக்கு குழப்பம் வரும் போதெல்லாம் “வாழைப்பழம்” எனும் சொல்லை அவருக்கு நினைவுபடுத்திக் கொண்டிருந்தேன்.

பாடலின் முதல் சரணத்தில் வரும் அந்தப் பகுதியை அவர் பயிற்சி செய்வதையும் அவர் பாடுவதை இயக்குநர்கள் சங்கர், சுரேஷ், ஒளிப்பதிவாளர் கார்த்திக் ராஜா ஆகியோர் ரசிப்பதையும் காணொளிச் சுட்டிகளில் நீங்கள் காணலாம்.

தான் அறிந்திராத ஒரு மொழியில் பாடும்போது அதன் உச்சரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார் என்பதையும் ஒற்றை எழுத்தைக் கற்றுக்கொள்ள ஒரு நாளையே ஒதுக்குகிறார் என்பதையும் கண்டபோது முத்தியார் அலி மேலிருந்த மதிப்பு பலமடங்கு உயர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *