6. 24 மணி நேரம் போதவில்லையா?
இதோ… இன்னொரு மணிநேரம்!

“எத்தனை வேலைதான் பார்க்கிறது-? இருபத்துநாலு மணிநேரம் போதலை” என்று அலுத்துக்கொள்பவரா நீங்கள்-? உங்களுக்குத் தேவைப்படும் இன்னொரு மணி நேரம், உங்கள் இருபத்துநாலு மணிநேரத்துக்குள்ளேயே ஒளிந்து இருக்கிறது. அதைக் கண்டுபிடித்துப் பயன்படுத்த, இதோ… சில எளிய வழிகள்:

சற்றுமுன்னதாகக் கண்விழியுங்கள்:
நீங்கள் வழக்கமாக எழுவதைவிடவும் கொஞ்சம் முன்னதாகக் கண்விழியுங்கள். ஆறுமணிக்கு எழுபவர் என்றால் ஐந்தரை மணிக்கு எழுந்து பழகுங்கள்.

நேரம் விரயமாவதைத் தவிர்த்திடுங்கள்:
எப்படியெல்லாம் நேரம் வீணாகிறது என்று பாருங்கள். டிவி பார்க்கும் நேரத்தைக் குறைக்கலாம். வெறுமனே அரட்டைக்கு வரும் நண்பர்களைத் தவிர்க்கலாம். வீட்டிலும் பணியிடத்திலும் வேலைகளைப் பிரித்துக் கொடுக்கலாம். வேலை நேரத்தில் தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகளைத தவிர்க்கலாம்.

புகைபிடிப்பதை நிறுத்துங்கள்:
புகைக்கும் பழக்கம் இருந்தால் அதைப் படிப்படியாக நிறுத்துங்கள். புகைபிடிப்பதற்காகச் செலவிடும் நேரம் கொஞ்சம் கொஞ்சமாய் வளரும். வாங்க சும்மா ஒரு தம்மடிச்சுட்டு வரலாம் என்று நண்பர்கள் அடிக்கடி அழைக்கத் தொடங்குவார்கள். இதில் நிறைய நேரம் வீணாகிறது.

அடுத்த நாளுக்கு ஆயத்தமாகுங்கள்:
உறங்கப்போகும் முன், அடுத்த நாள் அணிய வேண்டிய ஆடைகளைத் தயார்செய்து வையுங்கள். அடுத்த நாளின் முக்கிய வேலைகளைப் பட்டியல் போடுங்கள். படுத்தவுடன் உறங்கும் விதமாக உடல், மனம் இரண்டையும் பக்குவப்படுத்துங்கள். ஆழ்ந்து தூங்குங்கள். சுறுசுறுப்பாக எழுந்திருங்கள்.

மதியம் தூங்குபவரா நீங்கள்?
பரவாயில்லை. 15 நிமிடம் முதல் அரைமணி நேரம் வரை தூங்குங்கள். எழுந்தபின் உற்சாகமாக வேலைகளில் ஈடுபடுங்கள். கடின உழைப்பாளிக்கு மதிய வேலையின் சிறிய ஓய்வு மகத்தான சக்தியைக் கொடுக்கத்தான் செய்கிறது.

கூர்மையோடு செயல்படுங்கள்:
ஒருநாளின் பணிநேரத்தில் முடிந்தவரை கூர்மையாக இருங்கள். எந்த நேரத்திலெல்லாம் செயல்திறன் சிறப்பாக இருக்கிறதென்று பார்த்து, அந்த நேரங்களில் கடினமான வேலைகளை செய்து முடியுங்கள்.

யோசித்தபின் செயல்படுங்கள்:
எந்த வேலையைச் செய்வதற்குமுன்பும், நன்கு யோசித்துவிட்டுத் தொடங்குங்கள். தொடங்கியபிறகு யோசிப்பதால் நேரம் வீணாவதோடு, அந்தச் செயலையே செய்ய வேண்டியதில்லை என்றாகிவிட்டால் எரிச்சல்தான் ஏற்படும். ஒரு பணியையோ சந்திப்பையோ மேற்கொள்ளும் முன்பாக, அது தேவையா என்று சிந்தியுங்கள். தேவையில்லை என்றால் தவிர்த்துவிடுங்கள்.

பயன் தருகிறதா பயணங்கள்?
பயணங்கள் பயன் தருகிறதா என்று பாருங்கள். ஒரு சந்திப்பை உறுதிசெய்து கொள்ளாமல் பயணம் மேற்கொண்டு நேரம் வீணாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் இல்லம், அலுவலகத்திற்கு அருகில் இருந்தால் இன்னும் நல்லது.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *