நமது வீட்டின் முகவரி – 4

ஒரு காலத்தில் “கல்லூரிப் பருவம் என்றால் கலாட்டா பருவம்” என்கிற எண்ணம் இருந்து வந்தது. இன்று நிலைமை வேறு. விபரமுள்ள இளைஞர்களிடம் விசாரித்துப் பாருங்கள். கல்லூரிக்குப் பள்ளிக்கூடமே தேவலாம் என்பார்கள். ஆமாம், கையில் ஒரே ஒரு நோட்டுப்புத்தகத்துடன் ஜாலியாகப் போய் அட்டெண்ட்ஸ் கொடுத்துவிட்டு சினிமா தியேட்டரில் ஆஜராகும் வாழ்க்கைதான் கல்லூரி வாழ்க்கை என்கிற கனவு கலைந்து விட்டது.

பன்னிரண்டாம் வகுப்பின் பரபரப்புக்குச் சற்றும் குறையாமல் கல்லூரிக் கல்வியைத் தொடர்வதுதான் இன்று யதார்த்தமான சூழ்நிலை.

நிறைய மாணவர்களைப் பொறுத்தவரை, மறக்கப்பட்ட வாய்ப்புக்கான மற்றொரு வழியே கல்லூரியின் முதலாமாண்டு. உதாரணமாக, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து டாக்டராக கணேஷ§க்கு விருப்பம். கிடைக்கவில்லை. பி.எஸ்.சி. பயாலஜியில் சேர்ந்து எம்.எஸ்.சி. படித்து, எம்ஃபில் முடித்து, பி.எச்.டி. ஆய்வு செய்து, “டாக்டர்” ஆகலாமே என்கிற எண்ணம் பிறக்கிறது. உற்சாகமாகத் தனது கல்விப் பயணத்தைக் கணேஷ் தொடங்குகிறார்.

“விரும்பியதை அடைய விரும்பு. முடியாவிட்டால் அடைந்ததை விரும்பத்தக்க வெற்றியாக்கிக்கொள்” என்கிற புதிய கொள்கை இன்று பரவலாக மாணவர்கள் மத்தியில் காணப்படுகிறது.

அசைன்மெண்ட், இண்டேர்னல், செமஸ்டர் என்று கண்ணும் கருத்துமாகப் படிக்க வேண்டிய சூழ்நிலை கல்லூரிகளில் இப்போது! நிகழ்காலத்தின் இளமைத் துள்ளலை அனுபவித்துக்கொண்டே, எதிர்காலத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் கல்லூரி இளைஞர்கள். பள்ளியில், ஒவ்வொரு வகுப்பும் அரைமணி நேரம்தான். கல்லூரியில் அது ஒரு மணி நேரமாகும்.

படித்து முடித்த பிறகு அலுவலகத்தில் தொடர்ந்து எட்டுமணி நேரம் உட்கார ஒவ்வோர் இளைஞனும் கல்லூரியில் தயாராகிறான்.

“பள்ளிக்கூடமே பரவாயில்லை” என்று கல்லூரியைச் சொல்லக் காரணமுண்டு. பள்ளிக்குத் தொடர்ந்து சில நாட்கள் வராவிட்டால் ஆசிரியர் கேட்பார். கடிதம் கொடுக்க வேண்டும். அவசியப்பட்டால் அப்பாவை அழைத்துவர வேண்டும். கல்லூரியில் அதெல்லாம் கிடையாது. ஆனால் விடுமுறை எடுக்கிற நாட்களின் எண்ணிக்கை எல்லை மீறிவிட்டால், Lack of attendence என்று சொல்லித் தேர்வு எழுதுவதைத் தடுத்து விடுவார்கள். எனவே, தன்னைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு முழுக்க முழுக்க மாணவன் கையில்.

உயர்வோ, தாழ்வோ அடுத்தவர்களால் வருவதில்லை என்பதை உணர்ந்துகொள்ள அருமையான வாய்ப்பு கல்லூரிப் பருவம். கேளிக்கைகளில் கலந்துகொள்ளலாம். கரைந்துவிட முடியாது. காதலின் சுகம் உணர முடியும். சுயம் இழக்க முடியாது. ஒரு கையில் ஆயுதமும் ஒரு கையில் மலர்ச்செண்டுமாய் வாழப்படுகிற வாழ்க்கை கல்லூரி வாழ்க்கை. தனக்கேற்ற துறையில் சரியாக நுழைந்து, தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ள வாழ்க்கை தருகிற வசந்த வாய்ப்பே கல்லூரிப் பருவம். காதல் பற்றிக் கலர்க் கனவுகளோடு கல்லூரிக்குள் நுழையும் இனிய நண்பர்களே! கல்லூரியில், உங்கள் எதிர்காலத் துணையை மட்டும் தீர்மானிக்காதீர்கள். எதிர்காலத் தொழிலையும் தீர்மானியுங்கள்.

(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *