ஒருவர் வரைந்தால் கோடு
ஒருவர் வரைந்தால் கோலம்;
ஒருவர் குரலோ பாடல்
ஒருவர் குரலோ புலம்பல்;
ஒருவர் தலைமை தாங்க
ஒருவர் உழைத்தே ஏங்க;
வரைவது விதியா? இல்லை
வாழ்க்கை மனதின் எல்லை!

எண்ணம் கூனிக் கிடந்தால்
எதற்கும் அச்சம் தோன்றும்;
மண்ணைப் பார்த்தே நடந்தால்
மனதில் சோர்வும் வாழும்;
கண்கள் மலர்த்தி உலகைக்
கண்டால் மாற்றம் தோன்றும்;
விண்ணைப் பார்க்கும் மலர்கள்
வெளிச்சம் குடித்தே ஒளிரும்!

தன்னை மதிப்பவர் தமக்கே
துணையாய் நிற்கும் உலகம்;
பொன்னை நிகர்த்த மனதில்
புதிதாய் சிந்தனை பொலியும்;
இன்னும் உயரும் எண்ணம்
இருந்தால் வெற்றிகள் தோன்றும்;
மின்னல் போன்றது வாழ்க்கை
மழையாய்ப் பொழியவும் வேண்டும்!