காலமெனும் சோழிகளை கைகளிலே குலுக்குகிற

காளியவள் விட்டெறியும் தாயம்

நீலநிறப் பேரழகி நீட்டோலைக் குறிப்பலவோ
நீயும்நானும் ஆடுகிற மாயம்
கோடுகளைப் போட்டுவிட்டு கபடியாட விட்டுவிட்டு
காலைவாரிக் கைகள்கொட்டு வாளே
ஓடவிட்டு வாடவிட்டு ஓலமிட்டு நாமழுதால்
ஓடிவந்து மண்ணைத்தட்டு வாளே
குழிநிரப்பி குழிவழித்து குதூகலமாய் கலகலத்து
காளிஆடும் பல்லாங்குழி ஆட்டம்
அழிப்பதுவும் ஆக்குவதும் அவள்புரியும் ஜாலமன்றோ
ஆதிமுதல் ஆடுபுலி ஆட்டம்
பாண்டியாட சொல்லித்தந்து பாய்ந்து போக எத்தனித்தால்
பாதமொன்று தூக்கச்சொல்லு வாளே
தாண்டிப்போக வழியில்லாமல் தட்டழியும் வேளையிலே
தாவிப்போக சொல்லித்தரு வாளே
காயங்களைக் காயவிட்டு காளிபோடும்  களிம்புதொட்டு
காலுதறி விளையாடு ராசா
மாயக்காரி ஆணைக்கிங்கே மறுவார்த்தை ஏதுமுண்டோ ?
மகமாயி பிள்ளையென்றால் லேசா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *