கற்பகச் சோலையின் வண்ணத்துப்பூச்சிமேல்

கல்லை எறிகிற வேடன்-இவன்
சொப்புச் சமையலில் உப்புக் குறைவென
சீறி விழுகிற மூடன்
அற்பத் தனங்களின் பெட்டகம் ஒன்றினை
ஆக்கிச் சுமக்கிற பாலன் -இவன்
செப்பும்மொழியினில் செப்பம் கொடுத்தவன்
செந்தூர் நகர்வடி வேலன்
கானலின் ஓட்டத்தை கங்கையின் ஊட்டமாய்
கண்டு உளறிய பேதை-இதில்
வானப் பரப்பிடை வாழ்ந்திடும் மேகத்தை
வாங்கியதாய் ஒரு  போதை
ஊனின் சுகங்களில் ஊறிய நெஞ்சமும்
ஊரைப் பகைத்திட்ட வேளை-நல்ல
ஞான விடியலை நெஞ்சில் கொடுத்தது
நாயகன் கந்தனின் லீலை

ஓலமிடும் நெஞ்சில் ஓமெனும் நாதத்தை
ஓங்கிடச் செய்தவன் யாரோ-அந்த
நீலமயில்மிசை சூரியனாய் வந்து
நேரில் சிரிப்பவன் யாரோ
காலமெனும் துகள் கண்ணை உறுத்திடக்
காட்சி கொடுத்தவன் யாரோ-ஒரு
பாலகன் போலவும் வாலிபன் ஆகவும்
பாலில் குளிப்பவன் யாரோ

வண்ணக் கரத்தினில் சேவல் கொடியுடன்
வீரன் சிரிக்கிற கோலம்-தமிழ்ப்
பண்ணில் குளிக்கிற வேலைப் பிடித்தவன்
பண்ணுவ தெத்தனை ஜாலம்
பெண்க ளிருவரைப் பக்கம் இருத்தியும்
பக்தரைப் பார்க்கிற பாசம் -அவன்
கண்கள் தொடுகிற காரணத்தால் இந்த
காகிதப் பூவிலும் வாசம்

Comments

  1. நல்ல கவிதை…
    எளிமையான கவிதை
    எனக்கு பிடித்துள்ளது ..
    மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *