குளிர்சாதன அறை கொடுக்காத சுகத்தில்
உறைந்து போனவனாய் உள்ளே இருந்தேன்
விறைக்கும் அளவு ஆனபின்னால்தான்
வெப்பம் தேடி வெளியே நடந்தேன்.
குளிர்காய்வதற்கெனக் கூட்டிய நெருப்பில்
அலட்சியத் தணலே அதிகமிருந்தது.
நிராகரிப்பின் சூட்டைப் பொறுக்க
வழிதெரியாமல் வீதிக்கு வந்தேன்.
தெரிந்த மனிதர்கள், புதிய உறவுகள்
வரிசையாய் எதிரே வந்து கொண்டிருந்தனர்.
பழைய பகைவர்கள் சிலருமிருந்தனர்.
ஒவ்வொருவராய் வந்து கைகள் குலுக்கினர்.
எங்கெங்கோ நான் தேடிய வெப்பம்…
இங்கே, இவர்கள் உள்ளங் கைகளில்!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *