கம்பிகள் நடுவே பாம்பாய் -அவள்
கால்தொட நெளிகிற கூட்டம்
செம்பொன் சிங்கா தனத்தே-எங்கள்
சுந்தரி ஆள்கிற கோட்டம்
நம்பி வருபவர்க்கு அன்னை-எங்கள்
நாயகி மதுரை மீனாள்
கும்பிடும் கைகளில் அவளே -துள்ளிக்
கொஞ்சிடும் குழந்தையென்றானாள்

மாடங்கள் சமைத்தனர் அழகாய்-எங்கள்
மாதங்கி ராஜ்ஜியம் நடத்த
கூடல் நகரின் தெருக்கள்-அவள்
காலடி ஓசையில் சிலிர்க்க
ஆடல் நிகழ்த்திய சொக்கன் -அவள்
ஆருயிர்க் காதலில் களிக்க
கூடலில் அவர்கண்ட இன்பம்-அந்தக்
கோயிலில் கொட்டிக் கிடக்க

தோளினில் கிளியினை அமர்த்தும்-அவள்
தோழமை நமக்கொரு நலமாம்
தாளினை உதறிய அசைவே-எட்டுத்
திசைகளில் எழுமெழு ஸ்வரமாம்
பாளை வெடிப்பெனச் சிரிப்பாள்-அவள்
பார்வையில் நிற்பதே பலமாம்
நாளும் விடியலை நிகழ்த்தும்-எங்கள்
நாயகி நினைவே தவமாம்

வேதங்கள் நான்குமே வாசல்-அந்த
வித்தகி கதவுகள் திறப்பாள்
நாதங்கள் அவளுக்குப் படையல்-அதன்
நயங்களை அவள்மிக உகப்பாள்
மோதிடும் தென்றலின் குரலாய்-அவள்
மெல்லிய கீதம் இசைப்பாள்
ஏதுநம் சுமையெனும் போதும்-அவள்
இளநகைச் சுடரால் எரிப்பாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *