உன்கையில் ஒருபிள்ளை இருக்கின்ற போதிலும்
உலகத்தைப் பார்க்கின்ற மாதா
தன்கையில் உள்ளதை தருகின்ற யாருக்கும்
துணையாகும் மேரி மாதா

கடலோரம் குடிகொண்ட மாதா
கனவோடு கதைபேசும் மாதா

கல்வாரி மலையிலே சொல்மாரி தந்தவன்
கருவாக நீதானே கோயில்
பொல்லாத உலகிலே நில்லாத நீதியும்
நிலையாக நீதானே வாயில்

மலரோடு மலரான மாதா
மதம்தாண்டி மணம்வீசும் மாதா

ஆனந்த வானிலே ஓர்மின்னல் வந்ததே
அம்மாநீ கருவான நேரம்
ஏனிந்த நாடகம் வான்செய்த சாகசம்
அருள்கொஞ்ச உருவான ராகம்

சுதியோடு லயமான மாதா
சுகமான இசையாக நீவா

மன்றாடும் நெஞ்சிலே நின்றாடும் தென்றலே
மரியேஉன் திருவாசல் வந்தேன்
ஒன்றாகும் அன்பிலே உன்கோல வடிவிலே
என்தேவி ஒளிரூபம் கண்டேன்

ஒளிவீசும் மெழுகோடு நீவா
உலகெங்கும் நலம்காண நீவா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *