வாழ்வினில் ஆசை வைப்பவர்க்கெல்லாம்
வரமாய் வருபவள் நீ
தாழ்வுகள் மாற்றி தவிசினில் ஏற்றி
தாங்கும் கருணையும் நீ
ஊழ்வினை எழுத்தை உடனே மாற்றும்
உன்னத சக்தியும் நீ
சூழ்ந்திடும் செல்வம் சுடர்விடும் வாழ்வை
அருளுக திருமகளே

பாற்கடல் நிலவே பகலெனும் ஒளியே
பாதங்கள் தொழுகின்றோம்
மாற்றங்கள் தருக மேன்மைகள் தருக
மலரடி வணங்குகிறோம்
ஆற்றல்கள் பெருக்கு ஆயுளைப் புதுக்கு
அருளை நாடுகிறோம்
நேற்றையும் இன்றையும் நாளையும் நடத்தும்
நாயகீ போற்றுகிறோம்

பாம்பணை துயில்வோன் பாதங்கள் வருடும்
பணிவுள்ள குலமகளே
தாம்பினில் பிணித்த தாமோதரனின்
துணையாம் திருமகளே
ஆம்பொழு தெல்லாம் அரைவிழி நோக்கில்
அருள்புரி மலர்மகளே
கூம்பல் இல்லாத கமலத்தில் மலர்ந்த
கனிவே திருவருளே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *