மயில்சாயல் கொண்டவளா மங்கை – அந்த
மயிலுக்கு சாயல்தந்த அன்னை
கயலுக்கு சாயல்தரும் கண்ணால் -இந்த
ககனத்தைத் தான்படைத்தாள் முன்னை
புயல்சாயல் கொண்டதவள் வேகம்-அந்தப்
பொன்வண்ணன் விழிபடரும் மோகம்
முயல்கின்ற தவத்தோடே ஒளிர்வாள் – அவள்
முன்புவர மாட்டாமல் ஒளிவாள்

பிறையொன்று சிரங்கொண்ட பிச்சி -கதிர்
பொன்திலக மாகவொளிர் உச்சி
முறையெல்லாம் அவள்தானே படைத்தாள்-அதை
முந்திவரும் பக்தருக்காய் உடைத்தாள்
கறைக்கண்டன் செய்தவத்தின் வரமாய்-அந்தக்
காங்கேயன் கைவேலின் உரமாய்
தந்திமுகன் தாய்தானே திகழ்வாள் – இங்கு
தினந்தோறும் விடியலென நிகழ்வாள்

ஒன்பதுநாள் கொலுப்பொம்மை கண்டு-அந்த
ஓங்காரி நகைசெய்வ துண்டு
தன்மயமாய் ஆனமுனிவோரின் – நுதல்
தோன்றும்விழிதிறந்திடுவாள் வந்து
பொன்மயமாய் அபயகரம்நீட்டி – அருள்
பாலமுதம் கருணையுடன் ஊட்டி
மின்மயமாய் சக்திவந்து மறைவாள் -பின்
மூடுகின்ற கண்களுக்குள் நிறைவாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *