சின்னக் குழந்தைகளை மட்டுமின்றி பதின் பருவத்துக்கு முன்னும் பின்னும் இருக்கும். குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதில் தங்களை பெரியவர்கள் எப்படி எடைபோடுகிறார்கள் என்பது வெளிப்படுகிறது.

குழந்தைகளிடம் இயல்பாக, இனிமையாக நீங்கள் விருந்தினர்கள் முன்னிலையில் நடந்து கொண்டால் விருந்தினர்களும் அதுபோல் நடந்து கொள்வார்கள். வீட்டுக்கு வருபவர்கள் பலரும், ஏதோ விசாரணைக் கமிஷன் நீதிபதிகள் போல் குழந்தைகளிடம் பரீட்சை பற்றியும் மதிப்பெண் பற்றியும் மட்டுமே கேட்பார்கள். இவை தவிர குழந்தைகளின் உலகத்தில் எத்தனையோ, விஷயங்கள் இருக்கின்றன. எனவே குழந்தைகளை இயல்பாக நடத்துங்கள், விருந்தினர்களும் அப்படியே நடந்து கொள்வார்கள்.

அடுத்தது, குழந்தைகளை அவர்கள் செயல்களின் மூலம் அடையாளப்படுத்தாதீர்கள். குழந்தைகளிடம் நீங்கள் காட்டுகிற அடிப்படையான, அன்பை அவர்களின் தவறுகள் நிமித்தமாய் நிறுத்திக் கொள்ளாதீர்கள். “உன் மார்க் குறைந்து விட்டது. அம்மா ஒரு வாரத்துக்கு உன்னிடம் பேச மாட்டேன்” என்பது அபத்தத்திலும் அபத்தமான தண்டனை.

தவறு செய்தாலும், தன அடிப்படையான உறவை பெற்றோர்கள் தகர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பது பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய நம்பிக்கை. அப்போதுதான் குழந்தைகளிடம் பாதுகாப்புணர்வு தோன்றும்.

பகலில், என்ன விஷயமாக நீங்கள் பிள்ளைகளைக் கண்டித்திருந்தாலும் சரி, இரவு உறங்கப் போகும் முன்னால், அந்தக் குற்றவுணர்வை மாற்றிவிடுங்கள். சிரித்துப் பேசியோ, சினிமா போன்ற விஷயங்கள் குறித்து ஜாலியான ஒரு விவாதத்தை நடத்தியோ பிள்ளைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வாருங்கள்.

தவறு அவர்கள் மேல் இருந்து நீங்கள் திட்டியது நியாயம் என்றாலும் நம்பிக்கையை – சிதைக்கும் விதமாய் எதையும் எக்காரணம் கொண்டும் செய்யாதீர்கள்.

சுதந்திரம் குழந்தைகளுக்கு சரியாக வழங்கப் படும்போது அதுவே சுய கட்டுப்பாட்டையும் உருவாக்கிவிடும். விளையாட்டுக்கான நேரம் படிப்புக்கான நேரம் என்பதில் பல பெற்றோர்கள் தவறு செய்வார்கள். மாலை ஐந்து முதல் ஆறு, விளையாட்டுக்கான நேரம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து மணிக்கு விளையாடப் போகும்போதே “ஆறு மணிக்குப் படிக்க வரணும்! தெரியுமில்லே” என்று பயமுறுத்தி அனுப்பினால், ஆறுமணிக்கு வருவதை ஆனவரை தள்ளிப் போடவே குழந்தைகள் விரும்பும். இரண்டுக்கும் சமமான முக்கியத்துவத்தை பெற்றோர்கள் தரவேண்டும். “உன் விருப்பத்துக்காக விளையாடு! என் விருப்பத்துக்காகப் படி!” என்பது நீங்கள் தருகிற தவறான சமிக்ஞை . பெற்றோர்கள் தங்களைப் பற்றிப் பெருமையாக நினைக்கிறார்கள் – பாராட்டுகிறார்கள் – தங்களை நம்புகிறார்கள் – என்பதைக் குழந்தைகள் உணர்ந்தாலே அவர்களின் செயல்திறன் கூடுகிறது. பொறுப்பு வளர்கிறது.

படிப்பைப் போலவே மற்ற திறமைகளும் முக்கியம் என்பதைப் பெற்றோர்கள் உணர்ந்து கொள்வதும், உணர்த்துவதும் முக்கியம்.

சின்னச் சின்ன அக்கறையிலேயே குழந்தைகள் மகிழ்ந்துவிடுவார்கள். வெளியே சொல்ல மாட்டார்களாக இருக்கும். ஆனால் மனதுக்குள்ளே மகிழ்வார்கள். தங்களைத் தாங்களே திருத்திக் கொள்வார்கள். உங்கள் எதிர்பார்ப்பில் இருக்கிற நியாயத்தைப் புரிந்துகொண்டு தங்களை சீரமைத்துக் கொள்வார்கள்.

நம்புங்கள்…. உங்கள் குழந்தைகளும் சாதிப்பார்கள்!!!

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *