புதிய அம்சங்களை முயன்று பார்ப்பதில் பலருக்கு இருக்கிற தயக்கமே தோற்றுவிடுவோம் என்கிற அம்சம்தான். அந்த அச்சம் இருக்கும் வரைக்கும் புதுமைகளை முயன்று பார்க்க வாய்ப்பே இல்லை. தோல்விகள் தீண்டப்படாத எந்த நிறுவனமும் வளர்ந்ததாக வரலாறு கிடையாது. வித்தியாசமான அனுபவங்களை கொள்முதல் செய்ய ஒரு நிறுவனத்திற்கு சரியான வாய்ப்பு தோல்விகள் தான்.

ஜே அன் ஜே நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் ப்ரூக், “நீங்கள் தோல்விகளை ஏற்கிற விருப்பத்தோடு இருக்க வேண்டும்” என்கிறார். “தவறுகளை ஏற்கும் துணிச்சல் வருகிற வரைக்கும் யாராலும் புதுமைகள் படைக்க முடியாது” என்கிறார் யமர்சன் புதுமைகள் படைக்க முடியாது” என்கிறார் யமர்சன் சார்லஸ். தோல்விகளை ஏற்க மறுக்கிற போதுதான் தோல்விகளை ஏற்றுக் கொள்கிறபோது அதற்கான தீர்வுகளை நோக்கி நம்முடைய சிந்தனை நகர்கிறது.

CANI முறை என்ற ஒன்றை நிர்வாகவியல் நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். இதற்கு Constant and never ending improvement தொடர்ந்த, முடிவற்ற மேம்பாடுகள் என்று பெயர். ஒரு பொருளை மேம்படுத்த தொடர்ந்து முடிவற்ற முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் புதுமைகள் உருவாகும்.

நீண்ட காலமாக பின்பற்றப்படும் நடைமுறைகள் கால மாற்றங்களுக்கு பொருந்தாதவையாக இருந்தாலும் அவற்றை பழக்கத்தின் காரணமாய் தொடர்ந்து மேற்கொள்வது பின்னடைவுகளையே தரும். எனவே, அவற்றைக் கடந்து புதிய கோணத்தில் யோசிக்க நிறுவனம் தயாராக இருக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி ஒரு சிக்கலுக்கு எத்தனையோ தீர்வுகள் உண்டு. பெரும்பாலான நிறுவனங்கள் தமக்குத் தோன்றுகிற முதல் தீர்வையே முடிந்த முடிவாக தீர்மானித்துக் கொண்டு அதிலேயே நின்றுவிடுகின்றன. வெவ்வேறு கோணங்களில் யோசிக்கிறபோது இன்னும் புதுமையான, நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கக் கூடிய தீர்வுகள் ஏற்படும்.

எல்லாத் துறைகளிலுமே நாளுக்குநாள் புதிய புதிய மாற்றங்கள் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. அவற்றை அழமாக அறிந்து கொண்டு பொருந்தக்கூடிய புதிய அம்சங்களை நடைமுறைப்படுத்துவது நிறுவனத்தின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும்.

தோல்வி ஏற்படுமோ என்கிற அச்சத்தில் புதிய துறைகளை -முயன்று பார்ப்பதில் பலருக்கும் தயக்கம் இருக்கிறது. இது தேவையில்லாத மனப்பான்மை. நமக்கு நன்கு அறிமுகமான துறையில் நிபுணத்துவம் ஏற்பட்ட பிறகு புதிய துறைகளை முயன்று பார்ப்பதில் தவறில்லை. நமது துறை வேண்டுமானால் வேறாக இருக்கலாமே தவிர அடிப்படையான தொழில் அனுபவம் விலை மதிப்பில்லாதது. அந்த அனுபவத்தின் அடிப்படையில் புதிய துறையை எச்சரிக்கையாகவும், புத்திசாலித் தனமாகவும் அணுக இயலும் என்கிற நம்பிக்கை தொழில் முனைவோருக்கு அவசியம்.

மெக்டொனால்டு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்த ப்ரெட் டர்னர் ஷ¨ விற்பனையாளராக தன் வாழ்வைத் தொடங்கியவர். அவர் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு உயர்ந்த நிலைக்கு வந்தார். அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது வாடிக்கையாளர்களை சந்திப்பது, நேரத்திற்கு உரிய சேவையைதங தருவது, பொருளின் நன்மை, தீமைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்வது என்று எல்லாமே சேவைத் துறையின் பொதுவான அம்சங்கள்தான் என்பதால் புதிய துறைகளை நாடிச் செல்வது தனக்கு என்றுமே சவாலாக இருக்காது என்று குறிப்பிட்டார்.

வி-8 இயந்திரம் வடிவமைக்கப்பட வேண்டும் என்று தன் குழுவினரிடம் ஹென்றி ஃபோர்ட் முதன் முதலில் சொன்னபோது அவர்கள் அது சாத்தியமில்லை என்று தயங்கினர். பிறகு அதனை செய்தேயாக வேண்டும் என்று உறுதிபடச் சொன்ன பின் அது சாத்தியமானது. எனவே, புதிய சவால்களை மேற்கொள்வதில் ஒரு நிறுவனத்தின் தலைவரோ, நிறுவனமோ தயக்கம் காட்டக் கூடாது.

ஒரு நிறுவனத்தைப் பொறுத்த வரையில் அதன் நோக்கம், தொலைநோக்கு போன்ற அம்சங்களை நிறுவனத்தில் உள்ள அனைவருமே அறிந்திருக்கப் போவதில்லை. ஆனால், அதள் தலைமை நிர்வாகம் தான் தற்போது இருக்கிற நிலையையும் சென்று சேர வேண்டிய இடத்தையும் பற்றி மிகத் தெளிவான பார்வையை கொண்டிருப்பது அவசியம்.

தங்களுடைய வேலைகளை மட்டுமே கவனத்தில் கொண்டிருப்பவர்களுக்கு அத்தகைய தொலைநோக்கு நிர்வாகத்தால்தான் தரப்பட வேண்டும். எந்தவொரு நிறுவனத்திற்குமே பெரும் சவாலாக விளங்கக்கூடிய அம்சம் ஒன்று இருக்கும். அதை நோக்கி கவனத்தை செலுத்தினால் அது மிகுந்த நேரத்தை எடுத்துக் கொள்ளும் என்பதோடு தன்னுடைய நிறுவனத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடிய முடிவுகளை எடுக்கத் தூண்டும் என்பதாலேயே பலரும் அதனை ஒத்திப் போடுவதுண்டு.

எந்தச் சிக்கலையும் தள்ளிப் போடுவதாலும், ஒத்திப் போடுவதாலும் அது பெரிதாகுமே தவிர அந்த சிக்கலைத் தவிர்க்கவோ, தீர்க்கவோ முடியாது. எனவே, உடனடி கவனம் செலுத்தி, பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து சிக்கலை முடிவுக்குக் கொண்டுவருவது ஆரோக்கியமானது மட்டுமல்ல, ஆதாயமானதும் கூட, யார் கண்டது? அந்தச் சிக்கலுக்கு நீங்கள் கண்டறியும் தீர்வு புதிய வருமானத்தை தருவதாகவோ, புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவதாகவோ கூட அமையலாம். ஒரு சிக்கலை கையாள்வதென்பது அதைக் கடந்து போவதற்கான வழியாக இருக்க வேண்டுமே தவிர அதிலேயே நின்றுவி-டுவதற்கான சூழலை ஏற்படுத்தக் கூடாது.

– மரபின் மைந்தன் ம. முத்தையா
(உலகப்புகழ் பெற்ற நிர்வாக உத்திகள் என்ற புத்தகத்திலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *