ஒவ்வொரு நாளிலும் ஏதோவொரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. வாழ்வின் ஒவ்வோர் அங்குலமும் அர்த்தத்தாலும் அழகாலும் அபூர்வமான நிகழ்வுகளாலும் நிரம்பியிருக்கிறது. சாதாரண நாள் என்று ஒன்று அந்த உலகம் தோன்றிய நாள் தொட்டு உதிக்கவேயில்லை.

நம்மில் இருக்கும் உணர்வும் உற்சாகமும் திட்டமிடுதலும், செயல்படுத்துதலும்தான் ஒரு நாளில் நாம் என்னபெறுகிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு நாளையும் எதிர் கொள்ள அதற்கு முதல் நாளே நாம் தயாராக வேண்டும். இதில் மிக முக்கியம், ஒரு நாளோடு நம்மை எப்படித் தொடர்பு படுத்திக் கொள்கிறோம் என்பதுதான். உதாரணமாக, வணிகம் – கலை – தொழில் -கண்டுபிடிப்பு என்று ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கும்.

பங்குச் சந்தையில் பணம் போடுவது பற்றி ஒரு நண்பர் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். அன்று மார்ச் 13, அந்தத் தேதியின் முக்கியத்துவம் என்னவென்று கூகுளில் தேடினார். பட்டியலிடப் பட்ட பல முக்கியங்களில் ஒன்று அவர் கண்களைக் கவர்ந்தது. 1986ல் மைக்ரோசாப்டின் பங்குகள் முதல் முதலாக வெளியிடப்பட்டது மார்ச் 13ம் தேதி தான்!! காலையில் ஒரு பங்கின் விலை 21 டாலர்கள் இருந்தன. மாலையில் அதன் விலை 28 டாலர்களைத் தொட்டன. 14 ஆண்டுகளில் அதாவது 2000 -மாவது ஆண்டில் ஒரு பங்கின் விலை 10,000 டாலர்கள்! இந்த செய்தி அந்த நாளுக் கொரு புதிய முக்கியத்துவத்தை உருவாக்கியது. அந்த மனிதர் உற்சாகமாகிவிட்டார்.

ஒரு நாளை சாதாரண நாள் என்று யாரும் எடைபோடவே முடியாது. ஒவ்வொரு நாளையும் உற்சாகமாக எதிர்கொள்ள வேண்டுமென்றால், அதற்கொரு புதிய வழியைச் சொல்கிறேன்.

முதல் நாள் மாலையே, அடுத்த நாளின் முக்கியத்துவம் என்ன என்பதைக் கண்டறிந்து குறித்துக் கொள்ளுங்கள். அந்த நாளில் யாரேனும் ஒரு முக்கியமான தலைவர் பிறந்திருப்பார். அல்லது இறந்திருப்பார். இல்லையென்றால் ஒரு புதிய கண்டுபிடிப்பு நிகழ்ந்திருக்கும். ஒரு மகத்தான நிறுவனம் தொடங்கப்பட்டிருக்கும். ஏதேனும் சாதனை செய்யப்பட்டிருக்கும்.

இப்படி எத்தனையோ அம்சங்களை உலகம் ஒவ்வொரு விடியலிலும் கண்டிருக்கிறது. உதாரணமாக ஏப்ரல் ஒன்றாம் தேதியை எடுத்துக் கொள்ளுங்கள். உலகத்தையே ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவின் டாலர் சின்னமாகிய $ உருவாக்கப்பட்ட நாள் ஏப்ரல் ஒன்று! இது முட்டாள்கள் தினமல்ல. முக்கியமான தினம். இப்படி ஒவ்வொரு நாளைப் பற்றியும் முன் கூட்டியே தெரிந்து கொண்டு, முதல் நாளோ, சில நாட்கள் முன்னரோ அதை உங்கள் நாள் குறிப்பேட்டில் குறித்துக் கொள்ளுங்கள்.

காலையில் உங்கள் நாள் குறிப்பேட்டைப் பார்த்ததுமே இந்த நாள் ஒரு முக்கியமான நாள் என்பதை உணர முடியும். உங்கள் நண்பர்களுக்குக் குறுஞ்செய்தி மூலம் அந்த நாளின் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள். ஒவ்வொரு தினத்தையும் மகிழ்ச்சியுடனும் மலர்ச்சியுடனும் எதிர்கொண்டு புதிய முக்கியத்துவத்தை அந்த நாளுக்கு உங்கள் உழைப்பாலோ, படைப்பாலோ உருவாக்க முற்படுங்கள்.

ஏப்ரல் மாதத்தின் முக்கியமான சில நிகழ்ச்சிகளை இங்கே உங்களுக்காக….. பட்டியலில் விடுபட்ட தேதிகளின் முக்கியத்துவத்தை விருப்பமாய்த் தேடி நிரப்புங்களேன்!

ஏப்ரல் 1
இன்று உலக நாடுகளின் கரன்சிகளை உலுக்கி எடுக்கிற சின்னம், $ இந்த சின்னம் பிறந்த தினம் ஏப்ரல் 1. ஆலிவர் போலாக் என்ற தொழிலதிபர் 1778 ஏப்ரல் 1இல் இந்தச் சின்னத்தை உருவாக்கினார்.

ஏப்ரல் 2
டூபான்ட் நிறுவனத்தில் வேலை பார்த்த ராய் ப்ளங்கட், குளிர்வாயு ஒன்றைப் பரிசோதித்த போது, கன்டெய்னர் ஒன்றின் மூடிகளில் இழையிழையாய் ஒட்டியிருந்த ரசாயனம் ஒன்றை எதேச்சையாகக் கண்டறிந்தார். இன்று விண்கலங்கள் தொடங்கி மைக்ரோசிப் உட்பட பல இடங்களில் பயன்படும் டெஃப்லான் கண்டறியப்பட்ட தினம் 1938 ஏப்ரல் 6.

ஏப்ரல் 9
கம்ப்யூட்டர் உலகின் தந்தை என்றறியப்படுபவர், ஜான் ப்ரெஸ்பர் எகெர்ட். 1946இல், முதல் எலக்ட்ரானிக் டிஜிட்டல் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தார். 3 டன் எடையுள்ள இந்த எந்திரம் ஓர் அறை முழுக்க நிரம்பி வழிந்தது. இந்த அறிவியல் அற்புதத்தை நிகழ்த்திய ஜான் ப்ரெஸ்பர் எகெர்ட், 1919 ஏப்ரல் 9ஆம் தேதி பிறந்தார்.

ஏப்ரல் 11
மெக்ஸிகோ சென்றிருந்த தாமஸ் ஆடம்ஸ், சபோடில்லா மரத்தில் இருந்த சிகில் என்ற கோந்துப் பொருளைக் கண்டார். அதை ரப்பராக்க முயற்சித்துத் தோற்றவர், அதை உணவுப் பொருளாக்கினார். “அப்படியே மெல்ல” யாரும் தயாரில்லை. சர்க்கரையும் நறுமணமும் கலந்தார். அப்படி உலகின் முதல் சூயிங்கம் உருவான நாள் 1846 ஏப்ரல் 11.

ஏப்ரல் 13
தப்புந்தவறுமாய் கிளார்க் வேலை பார்த்த அந்த இளைஞரை, மலிவு விலை பொருள் விற்கும் இடத்திற்கு முதலாளி மாற்றினார். அங்கே தன் திறமையைக் கண்டறிந்த இளைஞர் முதலாளியிடம் 315 டாலர்கள் கடன் வாங்கி மலிவு விலை கடைகளைத் தொடங்கினார். 1919இல் அவர் இறக்கும்போது அமெரிக்கா முழுவதும் 1000 கடைகளை உருவாக்கியிருந்தார். பூல்வொர்த் ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஃபிராங்க் வின்ஃபீல்ட், பிறந்த தினம் 1952 ஏப்ரல் 13.

ஏப்ரல் 17
வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிறைந்த காலம். 1944 ஏப்ரல் 17இல் சியாட்டில் பகுதியில் வசித்த உணவக உரிமையாளர் ஒருவர், வேடிக்கையாகவும் வேதனையாகவும் ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார். “என் உணவகத்தில் பாத்திரங்கள் கழுவப் பெண் வேண்டும். தேவைப்பட்டால் அவரைத் திருமணம் செய்து கொள்கிறேன்.”

ஏப்ரல் 24
உலக வரலாற்றில் முதல் முறையாக 750 அடிக்கும் அதிகமான முதல் வணிகக் கட்டிடம் நியூயார்க்கில் திறக்கப்பட்டது. வாஷிங்டன்னில் இருந்தபடி அமெரிக்கா அதிபர் வூட் ரூ வில்ஸன் பொத்தானை அமுக்கியதும், 55 தளங்களில் இருந்த 80,000 விளக்குகள் ஓளிவீசின. 792 அடி உயரமான இந்தக் கட்டிடத்தைவிட உயரமான ஒரே கட்டிடம் உலக அதிசயமான ஈஃபிள் டவர். 1913ம் ஆண்டில் இது நிகழ்ந்தது.

ஏப்ரல் 27
1970 ஏப்ரல் 27ல் உலகின் முதல் ஏ.டி.எம், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கப்பட்டது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 1980ல் ஏப்ரல் 27ல் ஜெராக்ஸ் நிறுவனம், மவுஸ் உடன் கூடிய முதல் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தது.

ஏப்ரல் 28
இந்திய புராணங்களில் பேசப்படும் வெள்ளை யானை பற்றிக் கேள்விப்பட்ட பி.டி.பர்னம், தன் சர்க்கஸிற்கு ,வெள்ளை யானை என்ற பெயரில் பழுப்பு நிற யானை ஒன்றை வாங்கி 1884 ஏப்ரல் 28ல் அறிமுகம் செய்தார். எல்லோரும், அதைப் பார்த்து ஏமாற்றம் அடைய, அவரது போட்டியாளர் ஆடம் ஃபோர்பா தன் சர்க்கஸில் வெள்ளை யானை ஒன்றைக் கொண்டு வர, பெரும் கூட்டம் அலை மோதியது. புலனாய்வுச் செய்தியாளர் மூலம், அது வெள்ளை வண்ணம் பூசப்பட்ட யானை என்து வெளியானது.

– மரபின் மைந்தன் ம.முத்தையா

நினைத்தது போலவே வெற்றி என்னும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *