ஒவ்வொரு மனிதனின் உள் மனதிலும் உறங்கிக்கிடக்கிறது ஒரு குழந்தை. அது கட்டாய உறக்கமென்றும் சொல்லலாம். கையாலாகா உறக்கமென்றும் கொள்ளலாம். விளையாட்டுக் குணம் முடங்கியபிறகு, வியாபாரக் கண்ணோட்டம் தொடங்கிய பிறகு, தூங்கப் போனது அந்தக் குழந்தை.

தனக்குள் இருக்கும் குழந்தையை விழிப்பு நிலையிலும் வைத்திருப்பவர்கள் ஞானிகளும் கவிஞர்களும். அதனால்தான் ஞானிகளை “சேய்போல் இருப்பர் கண்டீர்” என்று பழம்பாடல் ஒன்று பேசுகிறது. கவிஞர்களின் குழந்தை மனதுக்கு நடைமுறை உதாரணங்கள் நிறைய உண்டு.

குழந்தைத்தனம் என்பது வாழ்வின் பெரிய வரம் என்பதை எத்தனையோ பேர் உணராமலேயே இருக்கிறார்கள். குழந்தைத்தனம் என்பதன் முதல் அடையாளம், திறந்த மனம்.

எதையும் புதிதாய்க் காணும் எண்ணம் இருந்தால் உள்ளம் உற்சாக ஊற்றாகும். சந்தோஷக் காற்றாகும். புதிய தகவலின்மீது நம் பழைய பதிவுகளின் நிழல் பதியும் போதெல்லாம் காட்சிக் குழப்பம் ஏற்படுகிறது.

குழந்தைகளின் மனம், புத்தம் புதிய கண்ணாடி. அருகே வருவதை அப்படியே பிரதிபலிக்கிறது. காட்சித் தெளிவில்தான் நிறைகளும் குறைகளும் நேர்படத் தெரிகின்றன.

மாசாலும் தூசாலும் மங்கி, ரசம் போன கண்ணாடிகளில் காட்சி மங்கலாய்த் தெரிவதுபோல ரசனை போன மனதில் வாழ்க்கையே மங்கலாகத்தான் தெரிகிறது.

குழந்தைத்தனத்தின் இன்னொரு தன்மை, நம்பிக்கை. அனாவசியமான அவநம்பிக்கைக்கு அங்கே இடமில்லை. அதனால்தான் வேகமாய் ஓடும்போது வழி நேர்ந்தால்கூட விழுந்த வேகத்திலேயே எழுந்து, குதித்தோடுகிறது குழந்தை.

வளர்ந்தபிறகோ, விழுந்தால் எழுந்துகொள்ளவே நேரம் பிடிக்கிறது. அது மட்டுமா? விழுந்ததால் விளைந்த வலியை விடவும் அந்த அவமானத்தின் வலியே அதிகமாயிருக்கிறது. ஓட மறுத்து மெல்ல மெல்ல நடக்கத் தோன்றிவிடுகிறது.

தோல்விகளைத் துடைத்துவிட்டுக்கொண்டு குதித்தோடும் குணத்தைக் குழந்தைப் பருவத்தில் இழந்துவிட்டு, “பெரிய” மனித வாழ்க்கையில் பயனேதும் இருக்கிறதா என்ன?
குழந்தைப் பருவத்தில் போட்டி மனப்பான்மை இருக்கும், என்றாலும் எதிரிகள் இருக்க மாட்டார்கள். போட்டிகளையே விளையாட்டாய்ப் பார்க்கும் பக்குவம், பிள்ளைப் பருவத்தில் இருக்கிறது. விளையாட்டைக் கூடப் போட்டிகளாய் விளங்கிக்கொள்ளும் வீம்பும் பகையும் வளர வளர… வளர்கிறது.

உள்ளே உறங்கும் குழந்தையை எழுப்பி விடும்போதுதான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. அறிவோடு உணர்வும், செயலோடு கனவும் சேர்கிறது. பார்வையில் தெளிவும் பிறக்கிறது. பூட்டிய மனதும் திறக்கிறது. “இன்று புதிதாய்ப் பிறந்தோம்” என்று பாரதி இதைத்தான் சொன்னான்.

வீழ்ச்சிகளைப் பெரிதாய்க் கருதினால் எழுந்துகொள்ள முடியாது. இப்போது சொல்லுங்கள்! உள்ளே தூங்கும் குழந்தையை என்ன செய்வதாய் உத்தேசம்? உங்களுக்குள் உள்ள குழந்தை தூங்குகிறதா விழித்திருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள். அன்று, “அணில், ஆடு” என்று பாடப் புத்தகத்தில் பார்த்தபோது எழுந்த பரவசம், இன்று அணிலையும் ஆட்டையும் நேர்படக் காண்கையில் நேர்கிறதா என்று உங்களை நீங்களே கேளுங்கள்.

மனதுக்குள் ஊற்றெடுக்கும் உற்சாகத்தை வெளிப்பட அனுமதிக்கிறீர்களா வெறும் புன்னகையாய் மட்டும் வெளிப்படுத்துகிறீர்களா என்று பாருங்கள்.

சிரிப்போ அழுகையோ சீறி வெளிப்படுகிறதா அல்லது உங்கள் பகீரத முயற்சியால் புதைந்து போகிறதா என்று பரிசோதியுங்கள். குழப்பங்களுக்கு மத்தியில் குடியிருந்தது போதும்… அந்தக் குழந்தையை எழுப்புங்கள்.

நீங்களாக வாழ்க்கையை எதிர்கொள்வதில் தயக்கமிருந்தால், அந்தக் குழந்தையை அனுப்புங்கள்.

மரபின் மைந்தன் ம.முத்தையா
வெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *