நான்காம் திருமுறை உரை

பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்
மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்
தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட
என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே

என்கிறார் சேரமான் பெருமான் நாயனார். இந்த வண்ணங்களை சொல்லி வழிபாடு செய்கிற பதிகம் பாடுகிற இந்த முறையை சேரமான் பெருமான் நாயனாருக்கு முன்னதாக யார் செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் நான்காம் திருமுறையில் திருநாவுக்கரசர் பெருமான் அதையும் செய்து இருக்கிறார். அவர் சொல்லுகிறார், பெருமானுடைய சடா பாரம் மின்னல் போல் இருக்கிறது.

அவர் ஏறுகிற அந்த வெள்ளை ஏறு இருக்கிறதே அதனுடைய நிறமும், அவர் மார்பில் பூசுகிற திருநீற்றின் நிறமும் ஒன்றாக இருக்கிறது. பெருமானுடைய திருமேனி பாற்கடல் போல் இருக்கிறது. உதிக்கின்ற கதிரவனுடைய திருவடி போல் சிவபெருமானுடைய திருவடி இருக்கிறது என்று சொல்கிறார். அந்த சூரிய நிறத்தில் திருவடி இருக்கிறது.

முடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பின்
பொடிவண்ணந் தம்புக ழூர்தியின் வண்ணம்
படிவண்ணம் பாற்கடல் வண்ணஞ்செஞ் ஞாயி
றடிவண்ண மாரூ ரரநெறி யார்க்கே.
என்று திருவாரூர் பக்கத்தில் திருவாதரைநதி இறைவன் பாடுகிறார்.

அப்படியென்றால், சேரமான் பெருமான் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது, அநேகமாக இந்த நான்காம் திருமுறையாக இருக்ககூடும் என்று நமக்குத் தோன்றுகிறது. திருத்தொண்ட தொகைக்கு அவர் எப்படி முன்னோடியாக விளங்கினார் என்று பார்த்தோம். சேரமான் பெருமான் நாயனார் பொன் வண்ணத்தந்தாதிக்கு முன்னோடியாக விளங்கினார் என்று பார்த்தோம்.

இந்த மனதினுடைய உருக்கத்தைச் சொல்கிறபோது இந்த இறைவன் வாழ்க்கையினுடைய துன்பங்களில் இந்த உயிர் எப்படி தடுமாறுகிறது என்று சொல்ல வந்தவர்கள், அதற்கு உவமையாக தயிர் எப்படித் தடுமாறுகிறது என்று சொன்னார்கள். மத்து இட்டு தயிரைக் கடைந்தால் தயிர் எப்படித் தடுமாறுமோ அப்படி உயிர் தடுமாறுகிறது. ஏனெனில், முதலில் திருவாசகத்தில் பார்க்கிறோம், “மத்துறு தண்தயிரின்புலன் தீக்கதுவக் கலங்கி” மாணிக்கவாசக பெருமான் சொல்கிறார்.

இந்த உவமையை பின்னாளில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் கையாளுகிறார். எங்கே கையாளுகிறார் என்றால் அனுமன் போய் சொல்லுகிறான். சீதா பிராட்டி இடத்தில், “உன்னைப் பிரிந்து இருக்கிற இராமனுடைய மனது எப்படி இருக்கிறது தெரியுமா? மத்தில் சிக்கிய தயிர் போல அப்படி இப்படி போய்வருகிறது” என்கிறான் அனுமன்.

“மத்துறு தயிரென வந்து சென்றிடைத்
தத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுற
பித்து நின் பிரிவினிற் பிறந்த வேதனை”

திருக்கடவூரில் அபிராமிபட்டர் இந்த உவமையை எடுக்கிறார்.

“ததியுறு மத்தில் சுழலுமென் ஆவி தளர்விலதோர்
கதியுறு வண்ணம் கருதுகண்டாய்” என்கிறார்.

மாணிக்கவாசகர் இடத்திலேயும், கம்பர் இடத்திலேயும், அபிராமிபட்டர் இடத்திலேயும் நாம் பார்க்கிற இந்த உவமையை முதலில் பாடியவர் நாவுக்கரசர் பெருமான் என்பது நமக்கு தெரிய வருகிறது.

இதே திருவாரூரில் மூலட்டான நாதரை பாடுகிறபோது

பத்தனாய் வாழ மாட்டேன் பாவியேன் பரவி வந்து
சித்தத்து ளைவர் தீய செய்வினை பலவுஞ் செய்ய
மத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும்
அத்தனே யமரர் கோவே யாரூர்மூ லட்ட னாரே.

என்று கேட்கிறபோது ஒரு பெரிய இலக்கிய முன்னோடியாகவும்தான் இருந்திருக்கிறார்கள் என்பது நமக்கும் தெரிய வருகிறது. நாம் இதுபோன்ற பார்வையில் பார்க்கிறபோதுதான் நமக்கு இவருடைய பெருமை நன்றாகத் தெரிய வருகிறது. எல்லாவற்றையும்விட நாவுக்கரசர் பெருமானிடத்தில் நான் மிக வியந்து பார்க்கிற விஷயம் ஒன்று உண்டு.

கோவையில் ஒரு பெரிய தமிழறிஞர் 94வயது வரை வாழ்ந்தார். சகோதரி சாரதா அவர்களுக்கு மிகவும் பழக்கமானவர். அவர் பெயர் முனைவர்.ம.ரா.போ.குருசாமி அவர்கள் நம்முடைய சாமி ஐயா அவர்களுடைய தலைமாணாக்கன். அவரிடம் நான் ஒரு தடவை கேட்டேன். திருக்குறளில் நகைச்சுவை எப்படி இருக்கும் ஐயா என்று கேட்டேன். அவர், “திருக்குறளில் நகைச்சுவை இருக்கிறது; இல்லாமல் இல்லை. ஆனால் கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு அதற்கு அவர் ஓர் உவமை சொன்னார், “போலீஸ்காரர் சிரிக்கிற மாதிரி இருக்கும்” என்று. அது மிகவும் பொருத்தமான ஒரு உவமையாக இருந்தது. நாம் சிரித்தபிறகு பார்த்தால் அவருக்கு போலீஸ்காரர் ஞாபகம் வந்துவிடும். அதுமாறி நாவுக்கரசர் பெருமானை ஒரு தன்னிகரக்கம் மிக்கவராக எப்படிப் பார்த்தாலும் தான், சமணத்துக்கு போய் வந்துவிட்டோம் என்று வருத்தப்படக்கூடியவராக.

பாசிப்பல் மாசு மெய்யர் பலமிலாச் சமண ரோடு
நேசத்தா லிருந்த நெஞ்சை நீக்குமா றறிய மாட்டேன்
தேசத்தார் பரவி யேத்துந் திருவையா றமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயு மன்றே.

அந்த தன்னிரக்கத்தோடு பாடுகிறவராக நாம் பார்க்கிறோம்.

-மரபின் மைந்தன் முத்தையா

                                                                                                                                                           (தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *