குமுறிய மனங்களில் பிறந்தவைதான்
குறிக்கோள் தொடுகிற வேகம்
சமுத்திரம் கொடுத்ததை சுமந்ததில்தான்
கொட்டி முழக்குது மேகம்
அமைதியைப் புரட்டிடும் சம்பவங்கள்
அவற்றிலும் நன்மைகள் நேரும்
நிமிடங்கள் கடக்கும் பொறுமையில்தான்
நினைத்தவை நிஜமாய் ஆகும்.

பூமியில் தோன்றிய தெய்வங்களும்
பாரங்கள் சுமந்தன பாவம்
சாமிகள் என்கிற போதினிலும்
சாமானியராய் வாழும்
ஆமையின் ஓடாய் மனமிருந்தால்
ஆயிரம் தயக்கங்கள் சூழும்
நாமந்த வானாய் விரிதிருந்தால்
நாளும்விடியல்கள் சேரும்

கிழக்கா மேற்கா எனும்திகைப்பு
கதிரவன் கொண்டதும் இல்லை
வழக்குகள் ஆயிரம் வளர்ப்பதுதான்
வாழ்வில் ஏற்படும் தொல்லை
இழக்கவும் பெறவும் நேர்வதுதான்
இந்தப் பிறவியின் எல்லை
மழைக்கும் பருவங்கள் மாறிவரும்
மயங்குவதால் பயன் இல்லை.

எண்ணிய கணக்குகள் மாறுகையில்
ஏனென உன்னைக் கேளு
பண்ணிய தவறைத் திருத்திக்கொண்டு
பாதையில் தொடர்ந்து ஓடு
மண்ணில் இருக்கிற வரையினிலே
மனிதா உனைநீ ஆளு
விண்வரை வளரும் உனதுபுகழ்
வென்றபின்னாலும் தேடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *