எத்தனை சாலைகள் இருந்தாலென்ன
எல்லாம் ஒருவழிப் பாதை
பித்தனும் சித்தனும் முக்தனும் சொல்லும்
வார்த்தைகள் எல்லாம் கீதை
கணபதி அவனே கர்த்தனும் அவனே
ககனத்தின் மூலம் அவனே
உருவம் இல்லாத் திருவும் அவனே
உயிரினில் நிறைபவன் சிவனே
ஏற்றிய சுமைகள் எத்தனை வினைகள்
எல்லாம் சுமந்திட வேண்டும்
மாற்றிட நினைத்து மண்ணுக்கு வந்தால்
வழியினில் சுமைபெறத் தூண்டும்
காற்றினை இழுத்து கடுஞ்சுமை குறைத்து
கனம்விழ குருவருள் வேண்டும்
தேற்றவும் ஆற்றவும் தெளிவுள்ள குருவின்
துணைபெறத் திருவருள் வேண்டும்
இதுவுந்தன் பாதை இதுவுந்தன் பயணம்
என்பதை வகுப்பவன் இறைவன்
எதிர்வரும் பகைமை எல்லாம் விலக்கி
இதுவழி என்கிற தலைவன்
புதியதோர் ஒளியில் புரிதலின் தெளிவில்
பொலிந்திட அவனே வருவான்
விதியினை வகுத்து விலக்குகள் கொடுத்து
விந்தைகள் பலவும் புரிவான்
திரைகடல் அலைகள் தினம் இடித்தாலும்
துறைமுகம் திடமாய் இருக்கும்
வரையறை கடந்து கடலெழும்போது
கரையையும் அள்ளிக் குடிக்கும்
வரைகளின் மேலே உறங்கிடும் முகில்கள்
வாரிதி வாரிக் குடிக்கும்
ஒருநொடி அவனின் திருவிழி பதிந்தால்
ஒளிச்சுடர் வினைகளை எரிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *