வீசிய பந்தின் விசைபோலே

வெய்யில் நாளின் திசைபோலே

ஏசிய வார்த்தையின் வலிபோலே
எழுதி முடியாக் கவிபோலே
பேசிட முடியாத் தீவிரமாய்
பேறுகாலத்தின் ஆத்திரமாய்
ஓசை எழுப்பும் உள்மனமே

உண்மைகள் தூங்கட்டும் உன்னுடனே
எல்லாச் சொல்லையும் சொல்வதெங்கே
எல்லாக் கனவையும் காண்பதெங்கே
நில்லாப் பொழுதுகள் மீள்வதெங்கே
நினைவுகள் அனைத்தையும் வாழ்வதெங்கே
கல்லால் எறிந்த காயங்களே
கண்ணைக் கட்டிய மாயங்களே
பொல்லா விடுகதைப் பொழுதுகளே
போதிக்க என்னென்ன பாடங்களே

உலகை வெல்வதும் ஒருபொழுது
உவகை மிகுவதும் ஒருபொழுது
நிலைகள் குலைவதும் ஒருபொழுது
நிஜங்கள் உணர்வதும் ஒருபொழுது
மலராய் மலர்வதும் ஒருபொழுது
மெழுகாய் உருகவும் ஒருபொழுது
மலையாய் எழுவதும் ஒருபொழுது
மனவான் காண்பது பலபொழுது

காட்சிப் பொருளாய்இருக்கும்வரை
காண்பவை எல்லாம் போராட்டம்
சூழ்ச்சிக் கிரையாய் ஆகும்வரை
சோர்வு கொடுக்கும் திண்டாட்டம்
சாட்சிப் பொருளாய் ஆனபின்னே
சட்டென்று விலகும் பனிமூட்டம்
ஆட்சி புரிகிற அமைதியிலே
ஆனந்தம் பருகிடு வண்டாட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *