நேற்றொரு பாதையில் நடக்கவிட்டாள்-இன்று
நான்செல வேறொரு திசையமைத்தாள்
காற்றினில் இலைபோல் மிதக்கவிட்டாள்-இளங்
காட்டுப்புறாவின் சிறகளித்தாள்
ஆற்றின் வெள்ளங்கள் கடக்கவிட்டா ள்-அவள்
அமிலக் கொதிப்புகள்  குளிரவிட் டாள்
ஊற்றெழும் வினைப்பயன் தூரவைத்தாள்-அந்த
உத்தமி தன்னிழல் சேரவைத்தாள்

சூரியன் போகிற வழிபார்த்தே -ஒரு
சூரிய காந்தி திரும்புதல் போல்
காரியம் பலப்பல பார்த்தபடி-அவள்
காருண்ய முகத்தினைப் பார்க்கச் சொன்னாள்
சூரியன் போவதோ ஒருவழிதான் -எங்கள்
சூலினி எங்கணும் பரந்துபட்டாள்
நேர்வரும் எதனிலும் நிற்பவளை-அட
நானெங்கு தனியாய்க் காணுவதோ

வீணையின் நாதத்தில் சிரிப்பவளை-அந்த
வெய்யிற் சூட்டில் தெறிப்பவளை
பூநிழல் வழியெங்கும் விரிப்பவளை-மனப்
புண்களில் இருந்து வலிப்பவளை
கோணல்கள் சரிசெய்து கொடுப்பவளை- வருங்
கோபத்தில் ஓங்கி அடிப்பவளை
ஆணவச் சேற்றினைத் துடைப்பவளை- எங்கள்
அம்பிகை தாள்களை சரண்புகுந்தேன்

என்னென்ன நான்செய்ய முற்படினும்-அவள்
எண்ணம் ஏதெனக் கேட்டுக்கொள்வேன்
கன்னி யவள்பதில் சொல்வதுண்டு-ஒரு
கள்ள மவுனமும் கொள்வதுண்டு
என்னையும் பொருட்டென எண்ணுகிறாள்-அட
இதைவிடப் புண்ணியம் என்னவுண்டு
பொன்னையும் சருகையும் பொருட்படுத்தும்-ஒரு
பேதமை தாய்க்கன்றி யாருக்குண்டு

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *