Linga-Bhariavi-06

சூட்சுமக் காட்சிகள் ஏற்படுத்தும் – அந்த
சுந்தரி சேட்டைகள் கொஞ்சமில்லை;
ஆட்சி புரிகிற அன்னையின் கோவிலில்
ஆனந்தப் பாட்டுக்கு பஞ்சமில்லை!

கைகள் பத்திலும் காத்துநிற்கும் எங்கள்
காருண்ய நாயகி கண்ணுதலாள்
பைரவி லிங்கரூபிணி – எங்களின்
பாடுகள் தீர்க்கிற பேரெழிலாள்!

யோகினி மாதினி ஏந்திடும் சூலினி
ஏழ்புவி காக்கிற நாயகியாள்;
மோகினி தவசிவ மாலினி பைரவி
மோட்சம் அருளிடும் மாதவத்தாள்!

பேசிடும் நாயகி பார்த்ததுண்டோ வந்து
பாருங்கள் ஈஷா கோவிலிலே;
கூசிடும் கண்களில் கூரிய மின்னலாய்
கூத்துகள் நிகழ்த்துவள் பைரவியே!

ஆரத்தி நேரத்தில் ஆனந்த ரூபத்தில்
ஆட்கொள்ளும் பைரவி சரணமம்மா;
வீரத்தில் தீரத்தில் வாஞ்சையின் ஈரத்தில்
வாத்சல்யம் காட்டிட வருக அம்மா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *